பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 1
நட்புப் பிரித்தல்
1. எருதும் சிங்கமும்

தென்னாட்டில் மகிழாருப்பியம் என்று ஓர் ஊர் இருந்தது. அங்கு வர்த்தமானன் என்ற பெயருடைய ஒரு வணிகன் இருந்தான். அவன் வெளிநாடுகளில் வாணிகம் செய்ய விரும்பி, தன்னிடம் இருந்த சரக்குகளைக் கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். ஒரு காட்டு வழியாகப் போகும் போது வண்டி மாடுகளில் ஒன்று காலிடறி விழுந்துவிட்டது. அந்த மாட்டின் கால் பிசகி அது நொண்டியாகிவிட்டது.

இதைக் கண்ட வணிகன், அந்த மாட்டை அவிழ்த்து விட்டுத் தன் சரக்குகளை ஆட்களின் தலையில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அந்த மாட்டைப் பார்த்துக் கொள்வதற்காக ஓர் ஆளை வைத்து விட்டுப் போனான்.