பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

125

களின் ஆலோசனைகளே அதற்குப் பொருத்தமாகத் தோன்றின.

ஆகவே, அது சிரஞ்சீவி என்ற அந்தக் காகத்திற்குப் பல பரிசுகள் கொடுத்து, 'சிரஞ்சீவி, இனி நீயும் என் அமைச்சர்களில் ஒருவனாய் இருந்துவா’ என்று பதவி கொடுத்துச் சிறப்பித்தது.

அப்போது சிரஞ்சீவி என்ற அந்தக் காகம், ‘அரசே, என் அன்புக்குரிய கோட்டான் அரசே, உனக்கு நூறு கோடி வணக்கங்கள். காக்கைகளால் அடிபட்ட நான் இந்தக் காக்கை யுருவத்தை வைத்துக் கொண்டு உன்னிடம் இருக்க வெட்கப் படுகிறேன். இப்போதே தீயிட்டு இந்த உடம்பை அழித்து விடுகிறேன். மறுபிறப்பிலாவது ஒரு கோட்டானாகப் பிறந்து அந்தக் காகங்களைப் பதிலுக்குப் பதில் தப்பாமல் அடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!' என்று பசப்பியது.

'சிரஞ்சீவி, ஆகாததைப் பற்றி ஏன் பேச வேண்டும். பெண்ணாக மாறிய எலி மீண்டும் எலியாக மாறியே வாழ வேண்டியிருப்பதைப் போலத்தான், அவரவர்கள் எடுத்த உடம்பை வைத்தே ஆக வேண்டிய செயல்களைப் புரிய வேண்டும். நீ நினைத்தாலும் உன்னுடைய காக வடிவத்தை மாற்றிக் கோட்டான் உருவம் அடைய முடியாது. அது குறித்து நீ மனக்கவலை கொள்ள வேண்டாம். இங்கே என்னிடத்தில் நீ எப்பொழுதும் நலமாக இருக்கலாம்’ என்று கோட்டான் அரசு சொல்லியது.