பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

பஞ்ச தந்திரக் கதைகள்

`புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்று பழமொழி யிருக்கிறது. ஆனால், இப்போது புலி நெல்லைத் தின்னும் புதுமையைப் பார்க்கிறோம். எல்லாம் கலிகாலக் கோலம்' என்று எல்லோரும் எண்ணி வியப்பு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு முரடன் இருந்தான். இது உண்மைதானா , அல்லது சூழ்ச்சியா என்று அறிந்து கொள்வதற்காக அந்தத் துணிச்சல்காரன், கையில் ஓர் ஈட்டியை ஏந்திய வண்ணம், கம்பளத்தால் தன் உடல் முழுவதும் மூடிக் கொண்டு ஓர் இடத்தில் ஒளிந்திருந்தான்.

வழக்கம் போல் பயிர் மேய்வதற்காகக் கழுதை வந்த நேரம் பார்த்து அவன் எழுந்திருந்தான். கம்பளப் போர்வையோடு வந்த உருவத்தைக் கண்டதும், அது பெட்டைக் கழுதை என்று நினைத்துக் கொண்டு, புலித்தோல் போர்த்த கழுதை கத்தத் தொடங்கியது. அதன் குரலைக் கேட்டவுடன், ஈட்டிக்காரன், `பூ! நீ ஒரு கழுதைதானா? சரி, இதோடு தீர்ந்து போ!’ என்று தன் கை ஈட்டியால் ஓங்கி ஒரு குத்துக் குத்தினான்.

அவ்வளவுதான்! கழுதை சுருண்டு பிணமாக விழுந்தது.

வாயடக்கம் வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கழுதையைப் போல், தன் வாயினாலேயே கெட்டொழிய நேரிடும்.