பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12. உருவம் மாறிய எலி

ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு பருந்து எலி ஒன்றைத் தூக்கிக் கொண்டு சென்றது. அந்த எலி எப்படியோ வளைந்து நெளிந்து அந்தப் பருந்தின் வாயிலிருந்து தப்பிக் கீழே விழுந்தது. கீழே வந்து கொண்டிருந்த எலி முனிவருடைய கையில் வந்து தொப்பென்று விழுந்தது.

தியானம் கலைந்து கண் விழித்த முனிவர் தன் கையில் விழுந்த எலியைக் கூர்ந்து நோக்கினார் தன் தவ வலிமையினால் ஒரு மந்திரம் கூறி அப்போதே அந்த எலியை ஓர் அழகிய பெண்ணாக மாற்றினார். தன் மனைவியிடம் கொடுத்து நன்றாக வளர்க்கும்படி கூறினார். அவ்வாறே முனிவர் மனைவி அந்த அழகிய பெண்ணை வளர்த்துப் பெரியவளாக்கினாள்.

பெரியவளாகிய அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டிய பருவம் வந்தது. அந்தப் பெண்ணை உலகத்தில் பெரிய பலவான் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று முனிவர் விரும்பினார். பெரிய பலவான்யாரென்று யோசித்த போது சூரியன் தான் என்று அவருக்குத் தோன்றியது. உடனே அவர் தன் தவசக்தியினால், சூரியனைத் தன் முன் வரும்படி கட்டளையிட்டார்.

அவனிடம், “நீ இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்" என்று கூறினார்.