பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு

227


யிருந்த அந்த அரக்கன் மீது ஏறிக் கொண்டு அதை ஓட்டிச் சென்றான். குதிரை நேராகச் செல்லாமல் இடக்குச் செய்வது கண்டு கள்ளன் அடித்தான். அடி பட்ட உடனே குதிரை முரட்டுத்தனமாக கண் காது தெரியாமல் ஓடத் தொடங்கியது. அது எங்கேயாவது தன்னைத் தள்ளிவிடக் கூடும் என்று பயந்த அந்தக் கள்ளன், வழியில் தென்பட்ட ஓர் ஆலமரத்தின் விழுதைப் பற்றித் தொங்கிக் கொண்டு குதிரையைத் தன் போக்கில் ஓடவிட்டான்.

குதிரையோ அச்சத்தோடு தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து அந்த ஆலமரத்தில் இருந்த குரங்கு ஒன்று, 'ஏ! அரக்கனாகிய குதிரையே சாதாரண மனிதனுக்கா இப்படிப் பயந்து ஓடுகிறாய்?’ என்று இழித்துக் கேட்டது. தனக்கு அஞ்சியோடும் அரக்கனின் அச்சத்தை மாற்ற அந்தக்குரங்கு முற்படுவதைக் கண்ட கள்வன் தனக்கு வந்த கோபத்தில், குரங்கின் வாலைப் பற்றித் திருகினான். குரங்கு வலி தாங்க முடியாமல் எட்டுத்திக்கும் கேட்கக் கத்திக் கதறியது.

குரங்கு தன்னைக் கள்ளனிடம் அகப்படுத்தத்தான் சூழ்ச்சி செய்கிறது என்று எண்ணிய அரக்கன், மேலும் வேகமாக அங்கிருந்து ஓடினான். கள்வனும் தான் தப்பியது குறித்து மகிழ்ச்சியடைந்தான்.