பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொக்கைக் கொன்ற நண்டு

47

மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது. வயிறு நிரம்பிய பிறகு, கொண்டு போன மீன்களை ஒரு பாறையில் காயப் போட்டு வைத்தது.

மீன்கள் எல்லாவற்றையும் கொத்திக் கொண்டு சென்ற பின் நண்டுதான் மிஞ்சியது. நண்டின் தசையையும் தின்னலாம் என்ற ஆசையோடு, அதையும் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. பறந்து செல்லும் வழியில் நண்டு கீழே பார்த்தது. எங்கு பார்த்தாலும் மீன் எலும்புகள் தரையில் கிடப்பதைக் கண்டதும், அது கொக்கு செய்த செயல் என்ன வென்று புரிந்து கொண்டது.'மீன்களையெல்லாம் தின்றது போதாமல் நம்மையும் இந்தக் கொக்கு கொல்லத் துணிந்து விட்டது. சூழ்ச்சியை, சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும். நம்மை இது கொல்லுமுன் இதை நாம் கொன்றுவிட வேண்டும்’ என்று எண்ணிய நண்டு, மெல்லத் தன் முன்னங் கால்கள் இரண்டையும் நீட்டி, கொக்கின் கழுத்தை வளைத்துப் பிடித்து நெருக்கியது. கழுத்து நசுங்கியதும், கொக்குக் கீழே விழுந்து இறந்தது. நண்டு வேறொரு குளத்திற்குப் போய்த் தன்இனத்தோடு சேர்ந்து கொண்டது.

பெரும் பகையையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பது இக்கதையிலிருந்து விளங்குகிறது.