பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பஞ்ச தந்திரக் கதைகள்

அழைத்து,' ஏன் முட்டையை எடுத்துச் சென்றாய்? இப்பொழுதே கொண்டு வந்து அந்தச் சிட்டுக் குருவியிடம் கொடுத்துவிடு. இல்லை என்றால் என் கோபத்துக்கு ஆளாவாய்’ என்று கட்டளை யிட்டார்.

கடவுளின் கட்டளையைக் கேட்ட கடலரசன் பயந்து நடுங்கி உடனே முட்டைகளைக் கொண்டு வந்து சிட்டுக் குருவிகளிடம் கொடுத்து விட்டான்.

கூட்டு முயற்சியால் ஆகாத காரியம் உலகத்தில் என்ன இருக்கிறது? எதுவுமே இல்லை. 

11. வாயடக்கம் இல்லாத ஆமை

இரண்டு அன்னங்களும் ஒர் ஆமையும் ஒரு குளத்தில் இருந்தன. அன்னங்களும் ஆமையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. இவ்வாறு இருந்து வரும் போது, நெடுநாள் மழை பெய்யாததால் அந்தக் குளத்து நீர் வற்றிப் போயிற்று. இதைக் கண்ட அன்னங்கள் இரண்டும் வேறொரு குளத்துக்குப் போகத் தீர்மானித்தன. அவை தங்கள் நண்பனான ஆமையை விட்டுப் போக மனமில்லாமல், அதை எவ்வாறு அழைத்துப் போவதெனச் சிந்தனை செய்தன. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து, அந்த ஆமையை அழைத்து, ‘நாங்கள் இரண்டு பேரும் இந்தக் குச்சியின் இரு நுனியையும் கவ்விக் கொண்டு பறக்கிறோம். நீ அதன் நடுப்பாகத்தை உன் வாயினால் பற்றிக் கொண்டு வா. இடையில் வாய் திறக்காதே’ என்று கூறின.