பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பஞ்ச தந்திரக் கதைகள்

சில நாள் கழித்து இருவரும் அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தார்கள். பணம் காணவில்லை. உடனே, கெட்டபுத்தி முந்திக் கொண்டு நல்லபுத்தியைப் பார்த்து, 'நண்பா இப்படி மோசம் செய்யலாமா?' என்று கேட்டான்,

'நீதான் எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்று கிறாய்!' என்றான் நல்லபுத்தி.

இருவருக்கும் சண்டை வந்து விட்டது. கடைசியில் வழக்கு மன்றத்திற்குப் போனார்கள். ஊர் வழக்காளர் அவர்களுடைய வழக்கை விசாரித்தார். பிறகு, 'ஏதாவது சாட்சி உண்டா?' என்று கேட்டார். 'எங்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறுயாரும் சாட்சியில்லை’ என்றான் நல்லபுத்தி.

'அந்த மரமே இதற்குச் சாட்சி சொல்லும்’ என்றான் கெட்டபுத்தி.

‘உண்மைதானா? காலையில் வாருங்கள் அந்த மரத்தையே கேட்போம்’ என்று சொல்லி வழக்காளர் போய்விட்டார்.

வீட்டுக்கு வந்த கெட்டபுத்தி தன் தந்தையை அழைத்து மரப்பொந்தில் போய் ஒளிந்து கொண்டு, மரம் சாட்சி சொல்வது போல் பேசச் சொன்னான்.

‘தம்பி, கொக்கின் முட்டையைத் திருடிய நாகத்தைப் போல் நமக்குத் துன்பம் ஏற்படக் கூடும். இந்தக் கெட்ட நினைப்பை விட்டுவிடு’ என்று அறி