இரண்டாம் பத்து
43
பகைத்தாரது புலங்களை இவ்வாறாக அழிக்கின்ற நினது மறமாண்பினைத் தம்முடைய அறியாமையினாலே மறந்து, நின் பகைமையினை ஏறட்டுக் கொண்ட அப் பகையரசரது நாடுகளைப் பார்த்தவாறே, இங்கே நின் நாட்டிடத்தேயும் வந்தேன்.
கடல்படு பொருள்களும், மலைபடு பொருள்களும், ஆறு பாயும் முல்லை மருதமாகிய நிலங்களிலே விளைகின்ற பொருள்களும், இவையல்லாத பிறநாட்டுப் பொருள்களும் ஆகிய பல்வகை வளங்களும் முட்டாதே பெறப்படுகின்ற, நின் அகன்ற நல்ல நாட்டிலுள்ள, விழாக்கள் ஓய்தலை அறியாத, முழவுகள் சதா முழங்கியபடியே யிருக்கும் மூதூர்களையும் கண்டேன்.
பலவகைப்பட்ட இனங்குறிக்கும் கொடிகளின் நீழலிலே பலவகைப் பொருள்கள் குவிந்து கிடப்பதும், பொன்னை மிகவுடையதுமான கடை வீதிகளிலே, வெற்றியும் கொடையும் பற்றிய செய்திகளை அறிவிக்க முழங்கும் முரசின் ஒலிகளையும் கேட்டேன். வலிமை மிகுந்த மறவர்களுக்குத் தலைவனே! பரிசிலரின் செல்வமாக விளங்குபவனே! தொடி சிதைவுற்றும், மாலையணிந்தும், உயர்ந்தும் விளங்கும் கொம்புகளையுடைய, போரிலே வல்லவான யானைகளைக் கொண்ட படையினை உடையவனாகிய சேரலாதனே!
பகைமை முதலானவற்றாலே மனத்துயரம் ஏதுமின்றிப் பலவகையான நலமும் பெருகியுள்ள இனிதான வாழ்க்கையினையும், வாய்மையே என்றும் பேசுதலையும், புலன்கள் ஐந்தும் அடங்கிய ஒழுக்கத்தையும், நிரயம் எய்தா வகையிலே தீதுகளை முற்றவும் நீக்கிய அறவேட்கையினையும் கொண்டோர் உயர்ந்தோர்! அவர், தாம் விரும்பி மேற்கொண்ட நல்லறங்களையே, தாமும் விரும்பி மேற்கொண்ட தம் சுற்றத்தாருடனே, தாம் வாழும் பதியைவிட்டு நீங்கிச் செல்லும் குற்றத்தை, அறியாதவர். அவர், தாம் விரும்பியவற்றை எல்லாம் இனிதாக நுகர்ந்தவராக, நினக்குரிய தம் ஊர்களிலேயே விரும்பி வாழ்ந்திருக்கின்றனர்.
பலரும் புகழும் பண்பினை உடையோனாகிய நீதான் காத்து ஓம்பி வருதலினாலே, நோயேதுமின்றி விளங்கும் புதுவருவாயினையுடைய நின் நல்ல நாட்டையும் கண்டேன்.
அளவிறந்து உண்டதனாலே மயங்கிப் பேச்சுத் தடுமாறியதனாலே, குழறும் மழலை நிரம்பிய நாவினாலே மென்