உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

49

திகழ்வது நின் தேவியது அழகிய மார்பகம். கற்பிற் சிறந்தாளான அவள்தான்—

ஏழு அரசர்தம் முடிப்பொன்னலே செய்யப்பெற்ற வெற்றியாரம் விளங்குவதும், வீரத்திருமகள் நிலையாக வீற்றிருப்பதுமாகிய சிறப்பைக் கொண்ட நின் மார்பினிடத்தே, தன் மையுண்ட கண்கள் துயிலுவதற்கான இனிய பாயலைப் பெறுவாளோ? செய்வினை கருதிச் சென்ற காலத்திலே அவளைப் பிரிந்து தங்குதலும், மீட்டும் மனைக்கண்ணே வந்து வாழ்கின்ற காலத்திலே அவளைத் தழுவிக் கொள்ளலுமாகிய இருவகையிலுமே வல்லமை யாளனே! நின் ஆண்மைபொருந்திய மார்பின் நினைவுதான் இதுகாலை நின் தேவியைப் பெரிதும் வருத்துகின்றது!

ஆதலினாலே, அவள்தான் தான் கொண்ட பாயலினிடத்தே கிடந்தும் இனிப் பிழைத்து எழுவாளோ? அதுதான் அரிதாகலின், நீதான் விரையச்சென்று அவளைக் காத்தருள் வாயாக, பெருமானே!

சொற்பொருள் : கோடு - மலைச்சிகரம். உறழ்தல் - மாறு படல். கொடுங்கண் - வளைந்த இடம். இஞ்சி - புறமதில். ஐயவி - மகப்பேறு பெற்றாள் பூசுவது பேய்ப்பகையாகிய ஐயவி: இங்கே குறிப்பிடப்பெறுவது ஐயவித்துலாம் என்னும் படைக்கருவிகளுள் ஒன்று. 'கோடுபுரந்து எடுத்த' எனக் கொண்டு, மதிலற்ற இடங்களை மலைச்சிகரங்கள் மதில்போற் காத்துப் பேணிக்கொள்ள எனப் பொருள் கொள்ளலும் பொருந்தும்.

கணைதுஞ்சல் - கணை ஓய்ந்திருத்தல். புதவு - புதை கதவம். ஏனம் - பன்றியின் ஏறு. மழகளிறு - இளங்களிறு. பொத்தி - மூண்டு வந்திசின் என்னும் வினையோடு சென்று முடிந்தது.

ஆறிய கற்பு - அறக் கற்பு: துயரைச் சகித்துக்கொள்ளலும், சகிக்கவியலாத எல்லைக்கண் உயிரைத் துறத்தலும் இது. அடங்கிய சாயல் - அடக்கமான பெண்மை நலம்; பரத்தையரைப் போலப் பூசி மினுக்காது அளவாக ஒப்பனை கொண்டு ஒழுகும் கற்புடைய மகளிரது தன்மை. ஊடற் காலத்தும் இனிய கூறும் செவ்வியுடையாள் என்றது, எதனாலும் தன் கணவனைப் பழித்துரைக்க மனம் ஒவ்வாத சிறப்புடையாள் என்றற்கு. அவள் பாயலே துணையாயினாள் என்றது, அத்துணைக்குப் பிரிவின் மெலிவால் தளர்ந்தாள் என்றதாம்.

ப-4