இவற்றில் உள்ள அடிப்படை மாறுபாடுகளும் சில விளங்குகின்றன. இவ்வாறே வேறு பல துறைகளிலும் உரைநடையில் நூல்கள் வந்துள்ளன.
மேலை நாட்டவர் தொண்டு
கடைசி எல்லைக்குச் செல்லுமுன் சென்ற நூற்றாண்டில் நம்மொடு இருந்து தமிழ் உரைநடையை வளம்படுத்திய மேலை நாட்டு அறிஞரைப் பற்றி எண்ணக் கடமைப் பட்டுள்ளோம். இவருள் மிக முக்கியமாக எண்ணத்தக்கதர்கள் டாக்டர் போப் அவர்களும் கால்டுவெல் அவர்களுமாவர். டாக்டர் போப் அவர்கள் குறள், நாலடியார் முதலிய சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததோடன்றி, திருவாசகம் முதலிய தெய்வநெறி நூல்களை மொழி பெயர்த்துத் தந்ததுமன்றி, பல இலக்கண நூல்களை எழுதி ஆங்கில நாட்டவரும்-ஏன்?-நம் நாட்டு இளைஞரும் நன்கு உணரத்தக்க வகையில் வெளியிட்டுள்ளார். அவர் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்திய திருக்குறள் நூலில் திருவள்ளுவர் சரித்திரம் உரைநடையில் எழுதப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதி இதுவாகும்.