பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பர்மாவில் பெரியார்

பணத்தைத் திரும்ப வாங்கிவிடு" என்று மீண்டும் மறுத்துரைத்தார் பெரியார்.

"இங்கே விமானத்தில் நான் கூட வந்து ஏற்றி விடுகிறேன். வந்தவர் மோல்மேனில் விமானத் திடலுக்கே வந்து உங்களை அழைத்துச் செல்வார். இடையில் நாற்பது நிமிடம் தான்" என்று கூறிப் பெரியாரை வற்புறுத்தி மோல்மேனுக்கு அனுப்பி வைத்தேன்.

உலக அனுபவங்கள் முழுவதும் அடைந்திருந்த அந்த முதுபெரும் அறிவின் செல்வர், அனுபவம் சிறிதும் இல்லாத என் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கடைசியாக மோல்மேன் செல்ல ஒப்புக் கொண்டார்.

பெரியார், தோழர் இராசாராம், மணியம்மையார் ஆகிய மூவரும் நாங்கள் வழியனுப்ப விமானத்தில் ஏறி மோல்மேனுக்குச் சென்றார்கள்.

அங்கே நடந்த நிகழ்ச்சி, அனுபவம் இன்மையால் நான் முடிவெடுத்த மடமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

காலையில் ஆறு மணிக்கு நாங்கள் 50 பேர் பெரியாரை வழியனுப்பி வைத்தோம். 6-40க்கு மோல்மேனில் பெரியார் விமானத்தை விட்டு இறங்கிய போது அவரை வரவேற்க யாரும் வரவில்லை.

என் நகரத்தார் நண்பர் தலைகாட்டவே இல்லை.

மோல்மேன் விமானத் திடல் நகரிலிருந்து ஐந்து கல் தொலைவில் ஒரு காட்டின் நடுவில் உள்ளது.

வெறுங் கட்டாந் தரையான ஒரு சிறு திடல்தான் விமானம் இறங்கும் இடம்.

விமானத்தை விட்டு இறங்கியவர்களும் வரவேற்க வந்தவர்களும் தவிர வேறு மனிதர் சந்தடியே இல்லாத இடம்.