பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பர்மாவில் பெரியார்


"அந்த ஆள் கண்ணிலேயே காணப்படவில்லை. அந்தப் பித்தலாட்டக்காரனை நம்பி எங்களைப் போகச் சொன்னாயே!" என்று மிகப் பெரிய குரலில் தொடர்ந்து பேசத் தொடங்கிவிட்டார் பெரியார்.

நான் மீண்டும் கல்லுப்பிள்ளையார் ஆனேன்.

மூன்றாவது நாள் மதியம் இராஜாராமும் மணியம்மையாரும் வந்து சேர்ந்தார்கள்.

இரயில் பயணத்தைப் பற்றி அவர்கள் பெரியாரிடமும் மற்ற கழகத் தோழர்களிடமும் கூறிக்கொண்டிருந்தார்கள். நான் ஏற்கனவே ஒரு முறை பயணம் சென்றிருக்கிறேன். அந்தத் தொல்லைகள் எனக்குத் தெரிந்தவை தான். இருந்தாலும், ஊருக்கு முற்றிலும் புதியவர்களான அவர்கள், பர்மிய மொழியும் தெரியாமல் அந்தப் பயணத்தை மேற்கொண்டது எவ்வளவு துன்பமாய் இருந்திருக்கும்!

மோல்மேன் நகர் ஆற்றின் அக்கரையில் அமைந்திருந்தது. ரயிலேற கரைகடந்து வரவேண்டும். அக்கரைக்கும் இக்கரைக்கும் சிறிய கப்பல் (Motor Launch) ஒன்று வருவதும் போவதுமாய் இருக்கும். இந்தக் கப்பலில் இருநூறு பேர்வரை வரலாம்.

இக்கரையில் உள்ள மார்ட்டபான் என்ற ஊரிலிருந்து தான் இரங்கூனுக்கு இரயில் புறப்படும்.

வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில், இரவு 8.30 மணிக்கு மார்ட்டபானில் இரயில் ஏறினால் காலை ஆறுமணிக்கு இரங்கூன் வந்துவிடலாம். இரவு இரயிலில் துாங்கிவிட்டுக் காலையில் கண் விழித்தால் இரங்கூனில் இருக்கலாம்.