பக்கம்:பறவைகளைப் பார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பறவைகளின் தந்திரத்தை அறிந்து அதை ஏமாற்றிப் பக்கத்தில் செல்வதில்தான் பறவை ஆராய்ச்சியின் சுவை பாதிக்குமேல் இருக்கின்றது. கரை அருகிலே மறைவிடங்களிலிருந்து நீர்ப்பறவைகளைக் கவனிக்கலாம்.

பறவை ஆராய்ச்சி வல்லுநர் முதலில் பறவைகளின் ஒலியைக் கேட்கிறார்கள். பிறகு அந்த ஒலிவரும் திசையை நோக்கிப் பறவையை அறிந்துகொள்ளுகிறார்கள். நீங்களும் அவர்களைப் பின்பற்றலாம். சில பறவைகள் ஒலி கொடுப்பதில் ஒரு தனித் திறமை காட்டுகின்றன பறவை ஓரிடத்தில் தழைகளில் மறைந்திருக்கும். அதன் ஒலி முதலில் ஒரு மரத்திலிருந்து வருவதுபோலவும் பிறகு வேறு ஒரு மரத்திலிருந்து வருவது போலவும் கேட்கும், சில பறவைகள் மிக மெல்லிய குரலில் பாடும். அதனால் அப் பறவைகள் அருகில் இருந்தாலும் தொலைவில் இருப்பதுபோல நமக்குப்படும்.

உங்களுடைய நோட்டுப் புத்தகத்தில் கீழ்க் கண்ட குறிப்புக்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள், தேதி, நேரம், வானிலை, காற்றின் நிலைமை இவற்றை முதலில் குறித்துக் கொள்ளவேண்டும். இடத்தின் தன்மையும் பெயரும் முக்கியமானவை பறவையின் பருமனை அடுத்தபடியாகக் குறிப்பிடலாம். இத்தனை செ.மீ. என்று முதலில் மதிப்பிடுவது சிரமம். ஆனால் நமக்குத் தெரிந்த பறவையின் அளவோடு ஒத்திட்டுப் பார்த்துக் குறித்துக் கொள்ளலாம். தெரிந்த பறவைகளான சிட்டுக் குருவி, கொண்டைக் குருவி, மைனா, காகம், கழுகு இவற்றை முதல் பக்கத்தில் குறித்துக் கொள்ளலாம். ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட ஒரு பறவை இந்தப் பறவைகளுக்குச் சிறியதாகவோ, பெரியதாகவோ இருந்தால் (-), (+) என்ற குறிகளை இட்டுக் கொள்ளலாம். சிட்டுக் குருவியைவிட ஒரு பறவை சற்று பெரியதாக

58