பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

காட்டுப் பாதையில் கண் தெரியாத இருட்டாக இருந்தது. தொலைவில் எங்கோ ஒரு சிங்கம் முழக்கம் செய்தது. அதன் எதிரொலி பயங்கரமாகக் கேட்டது. ஒரு பக்கத்தில் நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. காட்டுப் பூச்சிகளின் சத்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. ஆந்தைகளும், வெளவால்களும் பறந்து கொண்டிருந்தன.

முத்துமணி இவற்றை யெல்லாம் கண்டு பயப்படவில்லை: கந்தன் கையைப் பிடித்துக் கொண்டு அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். தன்னைப் பெற்ற அம்மாவைப் பார்க்க போகிறோம் என்ற ஆசை அவளைத் தள்ளிக் கொண்டு சென்றது.

நடந்து நடந்து முத்துமணிக்குக் கால் வலித்தது."கந்தா, அம்மா ஊர் இன்னும் எவ்வளவு தொலையிருக்கிறது?" என்று கேட்டாள்.

"இன்னும் எவ்வளவோ தொலையிருக்கிறது. உனக்குக் கால் வலித்தால் இங்குக் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டுப் போவோம்" என்று சொன்னான் கந்தன்.

சரியென்று வழியில் இருந்த ஒரு பெரிய கல்லின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டாள் முத்துமணி. கந்தனும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். முத்து மணிக்குத் தூக்கம் வருவது போல் இருந்தது. கல்லின் மேல் சாய்ந்து சற்றே கண்களை மூடினாள். சிறிது நேரத்தில் நன்றாகத் தூங்கத் தொடங்கி விட்டாள்.