பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பொன்னி வளர்ந்து பெரியவளாகி விட்டாள். பொன்னியின் அம்மா வள்ளி தன் மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டாள். கண்ணனுக்கோ தன் மகளை வசதியோடு கூடிய பெரிய செல்வர் வீட்டில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் ஒரு தோட்டக்காரன் மகளை எந்தப் பணக்காரன் திருமணம் செய்து கொள்ள விரும்புவான்?

ஒரு நாள் கண்ணன் முருகன் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தான். இவ்வளவு வேண்டியும் முருகன் கருணை காட்ட வில்லையே என்ற வருத்தத்தோடு அவன் நடந்து கொண்டிருந்தான். நம்பினவர்களை முருகன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவன் கோவிலை நோக்கி நடந்தான்.

“கண்ணா, கண்ணா” என்று யாரோ மெல்லிய குரலில் அழைப்பது கேட்டது. கண்ணன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. சிறிது தூரத்தில் கோயிலைச் சேர்ந்த மயில் ஒன்றுதான் நின்று கொண்டிருந்தது.

கண்ணன் நடக்கத் தொடங்கினான். மறுபடியும் “கண்ணா, கண்ணா” என்று அழைக்கும் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். யாரும் காணப்படவில்லை. மீண்டும் நடக்கத் தொடங்கினான். கண்ணா,கண்ணா என்ன அவசரம்? நான் சொல்வதைக் கேட்டு விட்டுப் போ என்றது அந்தக் குரல்.