பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

பொன்னி ஏன் வருத்தமாக இருக்கிறாய் என்று மயில் கேட்டது.

“எல்லாம்உன்னால் வந்தவினை. உன்பேச்சைக் கேட்டு நான் திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளை திருந்தாத பிள்ளையாய் இருக்கிறார். வீட்டுக்கு வரும் போதெல்லாம் குடித்து விட்டு வருகிறார்; என்னை அடித்து நொறுக்குகிறார். இந்த துன்பமான வாழ்வை நான் அனுபவிக்க வேண்டும் என்று நீ திட்டமிட்டாய் போலிருக்கிறது” என்று துயரத்தோடு பொன்னி கூறினாள்.

“பொன்னி, அறிவாளியின் கையில்உலகம் இருக்கிறது. நீ அறிவுள்ளவள், நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது” என்று சொல்லி விட்டு அந்த மயில் பறந்து போய் விட்டது. மயில் சொன்ன சொற்களை நினைத்துக் கொண்டே மலை மீது ஏறினாள். முருகனை வணங்கிய பின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.

அன்று கந்தசாமி நன்றாகக் குடித்து விட்டு வந்திருந்தான். பொன்னியை அடியடியென்று அடித்தான். முருகா முருகா என்று கூவிக் கொண்டே அத்தனை அடிகளையும் பொறுத்துக் கொண்டாள்.

இரவு நீங்கிப் பொழுது விடிந்தது. பொன்னி கந்தசாமியை எழுப்ப வந்தாள். படுக்கையிலிருந்து எழுந்த கந்தசாமி பொன்னியின் உடையில் அங்கங்கே இரத்தக் கறையிருப்பதை நோக்கினான். துணியை விலக்கிப் பார்த்த போது உடம்பெல்லாம் காயம் பட்டு வீங்கியிருந்ததைக் கவனித்தான்.

“பொன்னி, இதெல்லாம்என்ன? நீ யாரிடம் அடி வாங்கினாய்?” என்று கேட்டான்.