பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பல்லவப் பேரரசர்



பலவகைப்பட்ட கருத்துகள்

பல்லவர் - குறும்பர்

“தொண்டைநாட்டுப் பழங்குடிகள் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த குறும்பர் ஆவர். அவர்கள் பால் வாணிபம் செய்துவந்தவர்கள்; அதனால், பாலவர் (பால் + அவர்) எனப்பட்டனர்; அப்பெயர் நாளடைவிற் குறுகிப் பல்லவர் என மாறியிருக்கலாம். எனவே, பல்லவர் தொண்டை நாட்டுக் குறும்பர் இனத்தவரே ஆவர்.” என்பது ஒருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[1]

பல்லவர் - (மணி) பல்லவர்

“யாழ்ப்பாணத் தீவுகளில் ஒன்றான காரைத்தீவு சங்க காலத்தில் மணிபல்லவம் எனப் பெயர் பெற்றிருந்தது. அக்காலத்தில் இலங்கையிலும் மணிபல்லவம் போன்ற தீவுகளிலும் நாகர் மரபினர் வாழ்ந்து வந்தனர். மணிமேகலை என்னும் காவியத்திற் கூறப்பட்ட நெடு முடிக்கிள்ளி என்ற சோழ அரசன் இந்த நாக மரபினர் மகளான பீலிவளை என்பவளை மணந்தான். அவள் . பெற்ற மைந்தனே அலைகளால் தள்ளப்பட்டுக் கரைசேர்ந்தவன். அம்மகன் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டு அனுப்பப்பட்டதால் தொண்டையன் எனப்பட்டான். அவன் (மணி) பல்லவத்திலிருந்து அனுப்பப்பட்டதால் பல்லவன் எனப் பெயர் பெற்றான். அவன் வழிவந்தவர் ‘பல்லவர்’ எனப் பட்டனர். அவர் தம் அடையாளமாலை தொண்டைமாலை ஆகும்.பல்லவருள் முதல் அரசன் சங்க நூல்களிற் குறிக்க்ப்பட்ட தொண்டைமான் இளந்திரையனே ஆவன்.” என்பது மற்றொரு நூல் ஆராய்ச்சியாளர் கருத்து[2]


  1. Rea-Pallava Architecture.
  2. Rasanayagam - Ancient Jaffna.