பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேந்திரவர்மன்

87



9. மகேந்திரவர்மன்
(கி.பி. 615 - 630)[1]

முன்னுரை

சிம்மவிஷ்ணு மகனான மகேந்திரவர்மன் கிட்டத்தட்டக் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ அரியணை ஏறினான். (1) இவனது அரசியலின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது; பிற்பகுதியில் சைவம் உயர்நிலைக்கு வந்தது. இவனே, சமணத்தினின்று சைவத்திற்கு மாறினான். (2) குகைகளைக் கோவில்களாகக்குடைந்தவன் இவனே: பாறைகளைக் கோவில்களாக மாற்றியவனும் இவனே. (3) இவன் காலத்திற்றான் பல்லவர்-சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது.அப்போராட்டம் இவனுக்குப்பின் 150 ஆண்டுகள் வரை ஓய்ந்திலது. (4) சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் இவனது ஆட்சியில் வளர்ச்சியுற்றன. இவன் காலத்தவரே அப்பர் சுவாமிகள்.

இரண்டாம் புலிகேசி

இவன் சாளுக்கியப் பேரரசன்: கி.பி. 610 இல் சாளுக்கிய அரியணை ஏறினான். இவன் கதம்பர். கங்கர், ஆளுயர். மயூரர் முதலிய சிற்றரசரை அடக்கிப் பேரரசை நிலைநாட்டச் சில ஆண்டுகள் ஆயின. இவன் தம்பி விஷ்ணுவர்த்தனன் ‘நாசிக்’ (அசலபுரம்)கைத் தலைநகராக் கொண்டு சாளுக்கிய நாட்டின் வடபகுதியை ஆண்டுவந்தான்; அப்பொழுது ‘இளவரசன்’ என்ற பெயருடனே இருந்தான். அவன் அங்குக் கி.பி.614 முதல் ஆளத்தொடங்கினான் என்னலாம். புலிகேசி வெளியிட்ட ‘ஆய்ஹொளே’ கல்வெட்டுக் கி.பி. 634-635க்குரியது. அதனில், தான் வேங்கியை வென்று, (பிறகு) பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் குறித்துள்ளான்.


  1. Vide Dr. N. Venkataramamayya’s article on “Mahendravarmanan Pulikesin II’.