பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேந்திரவர்மன்

107



மீறி வந்தனர்; தங்கள் குறைகளை மறைக்கவே உடலை மூடித் திரிந்தனர். அவர்கள் தலைவரான புத்தர், வேதங்கள், மகாபாரதம் இவற்றிலிருந்தே தம் சமயக் கொள்கைகளைத் திருடினார் என்பது காபாலிகள் பெளத்தர் மீது கூறும் குறைபாடு ஆகும். இச் செய்தியிலிருந்து மகேந்திரன் காலத்தில் காஞ்சியில் பல புத்தப் பள்ளிகள் இருந்தன என்பது தெளிவாகிறது. இவனுக்குப் பிறப்பட்ட நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிக்கு வந்த இயூன்-சங்[1] காஞ்சியில் பல பள்ளிகள் இருந்தமைபற்றி எழுதியுள்ள குறிப்பு இத்துடன் ஒன்றுபடுதல் கவனிக்கத்தக்கது.

நால் எழுதப்பெற்ற காலம்

இந்நூலுட் சமணரைப்பற்றியும் ஓரளவு இழித்துக் கூறலால் இது, மகேந்திரன் சைவனாக மாறிய பிறகே செய்யப் பட்டதாக இருக்கலாம். திருச்சிராப்பள்ளியில் லிங்க வழிபாட்டை உயர்த்திக் கூறிய இவன்-சமணத்தை விட்டுச் சைவனாக இவன்-சைவனான பிற்காலத்தில் இதனை எழுதினான் என்பது இதனை ஒருமுறை வாசிப்பின் நன்கு விளங்கும். இவன் சமணத்தை விட்டபொழுதே பல்லவ நாட்டில் சமணம் வீழ்ச்சியுற்றது: சைவம் ஓங்கலாயிற்று. சமண பெளத்தர் பழக்க வழக்கங்கள் இழிந்த நிலைக்கு வரலாயின. அவற்றைக் கண்ட தமிழ்மக்கள் அச் சமயத் துறவிகளை வெறுக்கலாயினர். இவ்வுண்மையை அப்பர், சம்பந்தர் ஆழ்வார்கள் இவர்தம் அருட்பாடல்களில் நன்கு காணலாம். சங்ககாலத்திற் சிறப்புற்று நல்ல உரிமையோடு இருந்த சமண பெளத்த சமயங்கள், பிற்காலத்தில் அவற்றைச் சேர்ந்தவருடைய தீய பழக்க வழக்கங்களால் இழிநிலையை அடையலாயின என்பதே இதன் கருத்தாகும்.

சிறந்த குணங்கள்

மகேந்திரவர்மனைப் பற்றிய கல்வெட்டுகளிலிருந்து, ‘இவன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன், இசைக் கலையை


  1. Beal’s Records, Vol.II p.229