பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

153



இராசசிம்மன் காலத்துப் புலவரான தண்டி என்பார், கடற்கரைக் கோவிலைப் பற்றிக் கூறியிருத்தல் படிக்கத்தக்கது - அது, “மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவிலிற் பள்ளி கொண்டுள்ள திருமால் படிம (மூர்த்த)த்தின் மணிக்கட்டு ஒன்று பின்னமுற்றது. அதைச் செப்பனிட்டவன் ஒரு சிற்பி. நாண் அவன் விருப்பப்படி அங்குச் சென்று பார்த்தேன். அப் பெருமான் திருவடிகளைக் கடல் அலைகள் மோதி அலம்பிக் கொண்டிருந்த காட்சி அழகியது. திடீரென அலைகளால் திருவடியண்டைத் தள்ளப்பட்ட செந்தாமரை மலர் ஒன்று கண் இமைப்பதற்குள் விஞ்சையை (வித்யாதர) உருப்பெற்றுப் பெருமானை வணங்கி விண்புக்க காட்சியை நான் நேரே கண்டு களித்தேன்”[1] என்பது.

இத் திருமால் கோவிலுக்கு முன்புறமாகச் சிவன்கோவில் ஒன்று இராசசிம்மனால் கட்டப்பட்டது. அதனால் திருமால் பாதங்களில் அலை மோதிய நிலை பிற்காலத்தில் மாறிவிட்டது. அப் பெருமான் படிமத்தின் மணிக்கட்டைச் சிற்பி செப்பனிட்டான் என்று தண்டி கூறுதலாலும், அப் படிமம் பல்லவரால் பிரதிட்டை செய்யப்பட்டது என்று தண்டி கூறாமையாலும், அப் பெருமான் படிமம் மிகப் பழைமையானதே என்று கொள்ளத் தடையில்லை.[2]

கடற்கரையில் இப்பொழுதுள்ள கோவில் ஆறு அடுக்குக் கும்ப (விமான) த்தை உடையது; உள்ளறை ஒன்றையே கொண்டது. அவ்வுள்ளறையைச் சுற்றித் திருச்சுற்று இருக்கிறது. அதில் ஒன்பது சிறிய கோவில்கள் இருக்கின்றன.

கடற்கரை ஓரமாக ஒரு கல் தொலைவில் உள்ள முகுந்த நாயனார் கோவிலும் இராசசிம்மன் கட்டியதே ஆகும். இஃது அருச்சுனன் தேரைப்போலச் சிறியதாக அமைக்கப்பட்டது. இதன் தூண்கள் உருண்டு எவ்வித வேலைப்பாடும் இன்றி இருக்கின்றன. தென்


  1. A.Rangaswami Saraswathi’s article on “The Age of Baravi and Dandin” in Q.J.M.S.Vol.XIII, pp.674-679.
  2. M.Raghava “Iyengar’s “Alvargal Kala nilai.’ p. 143.