தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்
171
பாண்டியருடைய படையை நிம்பவனம், சூதவனம், சங்கர கிராமம், மண்ணைக்குறிச்சி, சூரவழுந்துர்முதலிய இடங்களில் வென்றான்.[1] பாண்டியர் பட்டயங்கள், ‘நெடுவயல், குறுமடை மன்னிக்குறிச்சி, பூவலூர், கொடும்பாளுர், பெரியலூர் என்னும் இடங்களில் பாண்டியன் வெற்றிபெற்றான். குழும்பூரில் நடந்த போரில் பாண்டியன் பல்லவனுடைய கரிகளையும் பரிகளையும் கைக்கொண்டான்’[2] என்று கூறிகின்றன. இவற்றுள் மன்னிக்குறிச்சி என்பது அறந்தாங்கித் தாலுக்காவில் உள்ள மணக்குடி ஆகலாம்; நிம்பவனம்-வேப்பங்காடு, சூதவனம்-கோவிலூர் (தேவாரகாலத்துத் திருவுசாத்தானம்) சங்கரகிராமம் - சங்கரனார் குடிக்காடு ஆகலாம். இவை யாவும் தஞ்சைக் கோட்டத்திலேயே பெரும்பாலும் இருப்பவை; சில புதுக்கோட்டைச் சீமையில் இருப்பவை.
இந்த இடங்களில் இருதிறத்தாரும் வெற்றி பெற்றதாகக் கூறல் எங்ஙனம் பொருந்தும் எனின், பொருந்தும் என்றே கூறலாம். பாண்டியன் சில இடங்களில் வெற்றி பெற்றான்; இறுதியில் உதயசந்திரன் சில இடங்களில் வெற்றி பெற்றான் எனக் கோடலே நேரிது, உதயசந்திரன் வருவதற்குமுன் சில இடங்களில் போர் நடந்திருக்கும்; முற்றுகைக்குப் பின் பல இடங்களில் சேனை சிதறிப் போர் செய்திருத்தல் இயல்பே. ஆங்காங்கு நடந்த போர்களில் ஆயினும், இறுதியில் பல்லவன் வெற்றிபெற்றான் என்பதில் ஐயமில்லை.[3]
உதய சந்திரன்
இரண்டாம் நந்திவர்மன் பரிவேள்வி செய்ய விழைந்து, குதிரையை வடக்கே அனுப்பினான். அதுவேங்கி நாடு சென்றது. அதனை ஆண்ட விஷ்ணுராசன் என்னும் கீழைச் சாளுக்கியன்