பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

257



காலத்திலேயே இம் மடம் இருந்திருக்கலாம் எனக் கோடலில் தவறில்லை.

காளாமுகர்

இக் காளாமுகர் பெரும் படிப்பாளிகள் சிறந்த ஒழுக்கம் உடையவர்கள் பக்தித் துறையை மேற்கொண்டவர்கள், மணல் மீது படுத்தல், மந்திரம் செபித்தல், பதிகங்கள் பாடல், இறைவனைப் பற்றிப் பாடி ஆடுதல், உழவாரப்பணி புரிதல் முதலியவற்றில் ஈடுபட்டிருந்தனர்; ‘அவர்களை எந்நேரமும் மாணவர் சுற்றிக் கொண்டு இருப்பர்’ என்று கங்க நாட்டுக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. அவர் தம் பெயர்கள் ‘ராசி, சக்தி, அபரண’ என்ற முடிபுகளைப் பெற்றவை. அவருள் மணமானவரும் உண்டு; மணமற்றவரும் உண்டு. இருதிறத்தாரும் எண்வகை யோகங்களிற் பயிற்சி பெற்றவர். எனினும் மணமற்ற குருமாரே சிறப்பாகக் கருதப்பட்டனர். இவர்கள் மடங்கட்குத் தலைவர்களாகவும், கோவில் கண்காணிப்பாளராகவும், குருமார்களாகவும், சமயக் கல்விச்சாலைத் தலைவர்ககளாகவும் இருந்து வந்தனர். இவர்கள் தங்கள் அளப்பரிய பல துறைக் கல்வியால் நாட்டிற் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்கள் ஹொய்சளர் காலத்தில் ‘இராசகுரு’ என்ற உயர்நிலையில் இருந்து வந்தனர். இவர்களிடம் பேரரசர்கள் சீடர்களாக இருந்தனர். இதனைப் பிற்காலச் சோழர் கல்வெட்டுகளும் மெய்ப்பிக்கின்றன.

பாடத்திட்டம்

மடங்கள் கற்பித்த பாடங்களில் இலக்கணம், தரிசனங்கள், சித்தாத்தம்,[1] யோகம் அறநூல்கள், புராணங்கள், செய்யுள், நாடகம், தருக்கம், இசை, ஓவியம் முதலியன குறிப்பிடத்தக்கவை. [2]பல்லவர் கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் அணுகி ஆராயின், இதுகாறும் கூறப்பெற்ற அனைத்தும் பல்லவ நாட்டு மடங்கட்கும் பொருந்தியவையே என்பதை அறியலாம்.


  1. ‘இராசசிம்மன் சைவ சித்தாந்தத்தில் வல்லவன்’ என்று கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுகள் கூறுகின்றன. S.I.I. Vol.I.
  2. M.V.K. Rao’s “Ganga of Talakad’, pp.267-269.