பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

பல்லவர் வரலாறு



மடத்து ஆட்சிக் குழுவினர்

காவேரிப்பாக்கத்து வரதராசப் பெருமாள் கோவிலில் நிருபதுங்கன் காலத்துக் கல்வெட்டில், ‘மடத்துச் சத்தபெருமக்கள்’ என்பது காண்ப்படுகிறது. இத் தொடரால், ‘மடத்தை மேற்பார்க்க அறிஞர் எழுவர் இருந்தனர்’ என்பது தெளிவாகிறது. அவர் ‘அறிஞர் என்பதனாலும், எழுவர்’ என்பதானலும், மடத்துப் பணிகள் பல என்பதும், அவற்றை மேற்பார்க்கவோ ஆட்சி நடத்தவோ எழுவர் தேவைப்பட்டனர் என்பதும் நன்கு விளங்குகின்றன அல்லவா?

மடத்து ஆட்சி

‘சைவ சமய குரவர் தம் அடியார் பரிவாரங்களுடன் மடங்களில் தங்கி இருந்தனர்; அப்பர் திருப்பூந்துருத்தியில் மடம் ஒன்றை உண்டாக்கினார்; அங்கு இருந்துகொண்டு பல பதிகங்கள் செய்தார்; பஞ்சகாலத்தில் அப்பரும் சம்பந்தரும் திருவிழிமிழலையில் இருந்த இரண்டு மடங்களில் தங்கி இருந்தனர்’ என்பன போன்ற பல செய்திகளை நோக்க, ‘மடத்துச் சத்த பெருமக்கள்’ எனவரும் கல்வெட்டுத் தொடரையும் நோக்க. ‘பல்லவர் காலத்தில் பல ஊர்களில் சிறந்தகோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன.அவை ஒரு குழுவினர் மேற்பார்வையில் நடைபெற்று வந்தன. அடியார்க்கு வேண்டிய வசதிகள் அளித்தன. சமய வளர்ச்சிக்குரிய சிறந்த கலைப்பீடங்களாக இருந்தன’ என்பதை நன்கு உணரலாம். பல்லவப் பேரரசர் கோவில்களில் அமைத்த வியத்தகு ஏற்பாடுகளுடன், மடங்களிலும் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தமையாற்றான் சமயகுரவர் கவலையின்றி உற்சாகத்துடன் சமயப் பிரசாரத்தைப் பலமாக நடத்தி வந்தனர் போலும்!

பெளத்தர் கலை இடங்கள்

பல்லவர் காலத்தில் ஸ்ரீபர்வதம் எனப்படும் நாகார்ச்சுனமலை, வேங்கியை அடுத்த குண்டப்பள்ளி, தான்ய கடகம் முதலிய இடங்களில் பெளத்தவிகாரங்களும் பள்ளிகளும் இருந்தன என்பதை இன்றும் அங்குக் காணக்கிடக்கும் சிதைவுகள் கொண்டு