பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

பல்லவர் வரலாறு



பலவும் புரிந்த பெரியவன். அவனைப் பாராட்டி அபராசிதன் ஒரு வெண்பாப் பாடினான். அஃது அக்கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. பாவின் கீழ், ‘இவ்வெண்பாப் பெருமானடிகள்தாம் பாடி அருளித்து’ என்ற குறிப்புக் காணப்படுகிறது. அபராசிதற்குப் ‘பெருமானடிகள்’ என்ற பெயருண்டு. அவ் வெண்பா இதுவாகும்:

“திருந்து திருத்தணியிற் செஞ்சடைஈ சற்குக்
கருங்கலாற் கற்றளியா நிற்க-விரும்பியே
நற்கலைகள் எல்லாம் நவின்றசீர்நம்பியப்பி
பொற்பமையச் செய்தான் புரிந்து.”[1]

சத்திபல்லவன்

இவன் அரக்கோணம்தாலுக்காவில் தண்டலம் என்ற கிராமத்தில் ஏரியைப் புதுப்பித்தான் போலும் அங்குள்ள கல்வெட்டில் இரண்டு வெண்பாக்கள் இவனைப்பற்றிக் காணப்படுகின்றன. இவன் காலம் தெரியவில்லை.

(1) காடவர்கோன் சத்தி கற்றோட்டில் இட்டயாண்(டு)
ஏடியலீரைந்தில் இடுவித்தான்-நீடியசீர்ப்
பல்லவமா ராயன் பசிநீக்கித் தண்டலத்துக்
கல்லிவர்நீர் ஏரிக் கலிங்கு.”
(2) “மண்டலத்துளோர்மதிப்பவண்போளி யூர்நாட்டுத்
தண்டலத்தே ரிக்கலிங்கு தானமைத்தான-ஒண்டழிழ்ப்
பாமங்கை லான்விரும்பும் பல்லவமா ராயனெழில்
பூமங்கை தன்கோன் புரிந்து.”[2]

இராசபவித்திரப் பல்லவதரையன்

இவர் ‘அவிநயம்’ என்ற யாப்பிலக்கண நூலுக்கு உரை எழுதியவர் என்பதைத் தெரிவிக்கும் பாடல் ஒன்று நன்னூற்கு உரை வகுத்த மயிலை நாதரால் காட்டப்பட்டுள்ளது. அது வருமாறு:


  1. 433 of 1905
  2. Ep.ind, Vol. VII, p.26.