பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று ஐயங்கள்

327




பெளத்தர் தெருக்கள்

காஞ்சிநகராண்மைக்கழகம் கி.பி.1865இல் அமைக்கப்பட்டது. அக்காலத்திற்குமுன், இன்று ‘காமாட்சி’ அம்மன் சந்நிதித் தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு ‘புத்தர் கோவில் தெரு’ என்று வழங்கப்பெற்றது. அத் தெருவின் இப்பண்டைப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர்[1] இன்றும் அத் தெருவில் இருக்கின்றார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான் கைந்து வீடுகளுக்குப் பின்னுள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு அகப்பட்டன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தாள்[2] கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைக் காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. அக் கோவிலைச் சேர்ந்த பழைய கிணறுகள் இரண்டு இன்றும் நன்னிலையில் இருக்கின்றன. புத்தர் கோவிற் பகுதிகளைக்கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டதாம். இன்றுள்ள காமாட்சி அம்மன் சந்நிதித் தெருவை அடுத்த சுப்பராய முதலியார் இல்லத் தோட்டத்தில் ஏறத்தாழ 5 1/2 அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. அது முன் சொன்ன இரண்டைப் போலவே அமர்ந்த நிலையில் அமைப்புண்டதாகும்; முன்னவற்றை விடப் பெரியது. அந்தத்தோட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்று 150 ஆண்டுகட்குமுன் கட்டப்பெற்றதாம். அதன் அடிப்படையை அமைக்கும்பொழுது நின்ற கோலங் கொண்ட புத்தர் சிலைகள் காணப்பட்டனவாம். இச் செய்திகளைநன்கு ஆராயின்,புத்தர்கோவில் தெருஒன்று இருந்தது. அங்குப்புத்தர் கோவில்கள் சில இருந்தன என்பது நன்கு புலனாகும் இன்றுள்ள புத்தேரித் தெரு என்பது ‘புத்தர் சேரி’ என்று இருத்தல் வேண்டும்; ஆயின், ‘புத்தேரி’த் தெரு என்றே சோழர் கல்வெட்டுகளிலும் பயின்று வருதல் இதன் பழைமையைக் காட்டுகிறது. அறப் பணச்சேரித் தெரு என்று ஒன்றுண்டு. அஃது ‘அறவணர் (அறவண அடிகள்) சேரி’ யாக இருந்திருக்கலாம் என்பர்


  1. திருவாளர். பாலகிருட்டிண முதலியார் அவர்கள்.
  2. கருக்கி சினையாகுபெயராய்ப் பனையை உணர்த்திற்று ‘பனங்காட்டில் அமர்ந்த காளி’ என்பது பொருள்.