பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்காலப் பல்லவர்

47



தலைநகரம் தான்யகடகம் அல்லது அமராவதி என்னலாம். அவர் மரபில் மூவர் ஆண்டமைக்குப் பட்டயங்கள் உள்ளன. அவர்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் மறைந்தனர்; பிறகு பிருகத் பலாயனர் தோன்றினர். அவர்கள் ஆண்ட பகுதிக்குத் தெற்கே சாதவாகனர் மாகாணத் தலைவர்களாக இருந்த பல்லவர், இருதிறத்தாரையும் வென்று ஆந்திர பதத்தைக் கைக்கொண்டனர். இங்ஙனம் செய்த பல்லவ அரசன் சிவஸ்கந்தவர் மகனாகவே இருத்தல் வேண்டும் என்னை? ஆந்திரபதத்தில் உள்ள தன் பிரதிநிதிக்கு ஆணை விடுத்த முதல் அரசன் இவனே ஆதலின் என்க.[1] மேலும் இவன் தன்னை முதலில் இளம்பேரரசன் என்றும், பிறகு மகா இராசாதிராசன் என்றும் கூறிக் கொண்டதாலும், பேரரசன் செய்ய வேண்டிய பெரு வேள்விகள் செய்தமையாலும், இக்குவாகரும் சாதவாகனரும் வெளியிட்ட பட்டயங்களில் உள்ள பிராக்ருத எழுத்துகட்கு இவனது பட்டய எழுத்துகள் சிறிதே பிற்பட்டவை என்பது நன்கு தெரிதலின், இக்குவாகர்க்குப் பின் ஆந்திர பதத்தை ஆண்ட முதற் பல்லவன் - அங்ஙனமே காஞ்சியைக் கைப்பற்றி ஆண்ட முதற் பல்லவன் இவனே ஆவன் எனத் துணிந்து கூறலாம்.

சிவஸ்கந்த வர்மன் காலம்

இவன் விடுத்த பட்டயங்களின் உள்ளுரை பிராக்ருதத்தில் இருப்பினும், பட்டயம் கொடுக்கப்பட்டசெய்தி வடமொழியிலேயே இருத்தலாலும், குஷானரைப் பின்பற்றிக் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குப்தர் தம்மை ‘மகா ராசாதிராசர்’ என்று கூறிக் கொண்டவாறே இவனும் தன்னை மகாராசாதி ராசன் என்று கூறிக் கொள்வதாலும், இவனும் இவனுக்குப் பிற்பட்டவரும் கி.பி350இல் சமுத்திர குப்தனை எதிர்த்த விஷ்ணுகோப பல்லவனுக்கு முற்பட்டவர் என்பது அறிஞர் முடியாதலாலும் இன்ன பிற காரணங்களாலும்,-இவன் காலம் கி.மு. 300-325 எனத் துணிதலில் தவறில்லை.[2]


  1. Dr. K.G.Palacharl’s “Early History of the Andhra country’, pp.157,158.
  2. D. Sircar’s “Successors of the Satavahanas’ pp. 164-166,247–248.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/67&oldid=583592" இலிருந்து மீள்விக்கப்பட்டது