பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக்காலப் பல்லவர்

59



தந்தையான கந்தவர்மன் 2 ஆட்சி அதே ஆண்டில் முடிவுற்றதாகும். அவனது 33ஆம் ஆட்சி ஆண்டுப் பட்டயம் இருத்தலை நோக்க[1] அவன் ஏறக்குறைய 36 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். அங்ஙனமாயின், அவனது ஆட்சிக்காலம் கி.பி.400-435 என்றாகிறது.

(4) முதலாம் குமார விஷ்ணுவின் காலம் ஏறக்குறையக் கி.பி. 341-350 எனக் கொண்டதாலும், இரண்டாம் கந்தவர்மன் காலம் கி.பி. 400-436 எனக் கொண்டதாலும், இவ்விருவர்க்கும் இடைப்பட்ட முதலாம் கந்தவர்மன், வீரவர்மன் என்பவர் ஆட்சிக்காலம் 50 ஆண்டுகள் ஆகின்றது. எனவே, வரலாற்றாசிரியர் மதிப்பிடும் 25 வருட ஆட்சி ஒவ்வொருவர்க்கும் கணக்காகிறது. அஃதாவது, முதலாம் கந்தவர்மன் காலம் கி.பி. 350-375 வீரவர்மன் காலம் கி.பி. 375-400

(5) “விஷ்ணுகோபன் ஈறாக அரசர் பலர் காலமான பின்னர்ப் பல்லவர் குடும்பத்தில் நந்திவர்மன் பிறந்தான். அவன் சிவனருளால் நாக அரசனை அடக்கினான்,’ என்று வேலூர்ப் பாளையப் பட்டயங்கள் கூறலால், விஷ்ணுகோபன் உள்ளிட்ட அரசர் பலருக்குப் பிற்பட்டவன் நந்திவர்மன் 1 என்பது மட்டுமே தெரிகிறது; காலம் உறுதியாகக் கூறக்கூடவில்லை. நமது பட்டியலில் விஷ்ணுகோபன் மகன் மூன்றாம் சிம்மவர்மன் குறிக்கப்பட்டுள்ளான். அவன் மகனே பிற்காலப் பல்லவர் முதல்வனான சிம்ம விஷ்ணு என்பவன். இவன் காலம் கி.பி. 575-615 என ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே, நந்திவர்மனும் அவனுக்குப் பிற்பட்ட மூன்றாம் சிம்மவர்மனும் ஏறக்குறையக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பட்டவர் (கி.பி. 525-575) ஆவர். ஏனையோர் அனைவரும் ஏறத்தாழக் கி.பி. 475க்கும் 525க்கும் இடைப்பட்டவர் ஆகலாம்.

பல்லவர் வரலாற்றில் துன்பம் தரத்தக்க பகுதி இஃதொன்றே ஆகும். இரண்டாம் கந்தவர்மன் மக்கள் மூவர்-அவரவர் வழிவந்தவர் பலர்-இவருள் இவருக்குப் பின் இவர் பட்டம் பெற்றனர்-அக்காலம் இன்னது என வரையறுத்துக் கூற இயலவில்லை. இதனாற்றான்,

  1. Omgodu plates of Skandavarman II.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/79&oldid=583604" இலிருந்து மீள்விக்கப்பட்டது