பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பல்லவர் வரலாறு



7. பிற்காலப் பல்லவர்
(கி.பி. 575-900)

இக்காலச் சிறப்பு

(1) இக்காலத்தில் பெரும்பாலான நாயன்மாரும் ஆழ்வாரும் தமிழகத்தில் வாழ்ந்தனர்; சமணரோடு போரிட்டுச் சைவ வைணவ சமயங்களைப் பரப்பினர்: பேரரசர்களையும் சமயம் மாறும்படி செய்தனர். தமிழ்மக்கள் இக்காலத்தில் சிறந்த முறையில் சமயப்பற்றுடையர் ஆயினர். மக்கள் மனப் போக்கை உணர்ந்த பொறுப்பு வாய்ந்த அரசர், மக்கள் உள்ளம் உவப்பப் பல கோவில்களைக் கட்டினர்; தாமும் மெய்யான பக்தியில் ஈடுபட்டனர். இச் சமயப் போராட்டத்தில் இருந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களும் தேவாரப் பாடல்களும் இக்கால அரசர்நிலை, நாட்டுநிலை, சமயங்கள் நிலை, மக்கள் நிலை முதலியவற்றை நன்கு விளக்குகின்றன. (2) இக் காலத்திலே தான் புகழ்பெற்ற பெருவீரரான பல்லவர் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் தெற்கே காவிரியாறு வரையும் வடக்கே கிருஷ்ணையாறு வரையும் மேற்கே.சாளுக்கியநாடு வரையும் தங்கள் பேரரசை விரிவாக்கி ஆண்டனர். இக்காலத்தேதான் வரலாற்றுப் புகழ்பெற்ற சாளுக்கியர்-பல்லவர் போர்களும், பாண்டியர்-பல்லவர் போர்களும், கங்கர்-பல்லவர் போர்களும், இராட்டிரகூடர் - பல்லவர் போர்களும் பிறவும் நிகழ்ந்தன. (3) இக்காலப் பல்லவர்தாம் குகைக்கோவில்களையும் மலைக்கோவில்களையும் கற்கோவில் களையும் அமைத்து அழியாப் புகழ் பெற்றவர் ஆவர். இவர்க்கு முற்பட்ட காலங்களில் தமிழகத்துக் கோவில்கள் மரத்தாலும் மண்ணாலும் செங்கற்காலுமே கட்டப்பட்டவை. அவை நாளடைவில் அழிந்துவிட்டன. (4) இக்காலத்திற்றான் பல்லவ நாட்டில் வடமொழி சிறப்பாகப் போற்றி வளர்க்கப்பட்டது. வடமொழி வல்ல மறையவர் பல ஊர்களைத்தானமாகப் பெற்றனர். வடமொழிக் கல்லூரிகள் தோற்றமெடுத்தன. புகழ்பெற்ற கிராதார்ச்சுனீயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/94&oldid=517550" இலிருந்து மீள்விக்கப்பட்டது