பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பல்லவர் வரலாறு



8. சிம்ம விஷ்ணு

சிம்மவிஷ்ணு காலம்

இவனே புகழ்பெற்ற பிற்கால அரசருள் முதல்வன் ஆவன். இவன் இடைக்காலப் பல்லவர் பட்டியலில் உள்ள மூன்றாம் சிம்மவர்மன் மகன்; முதல் நந்திவர்மனுடைய (ஒன்று விட்ட) உடன் பிறந்தான் மகன். (காசக்குடி, வேலூர் பாளையம் ஒப்பு நோக்கிக் காணின், இப் பிற்காலப் பல்லவர் முதல்வனான சிம்ம விஷ்ணு நந்திவர்மனுக்குப் பின்பட்டம் பெற்றவள் ஆவன்.) இவனுக்குப் பீமவர்மன் என்றொரு தம்பி இருந்தான். அவன் இவனது ஆட்சியில் வட பகுதியை ஆண்டுவந்தான் போலும் சிம்மவிஷ்ணு காலத்துப் பட்டயம் எதுவும் கிடைத்திலது. முற்கூறிய அவந்தி சுந்தரி கதையினால் இவன் கால்ம் அறிதல் முடிகிறது. ‘சிம்ம விஷ்ணு கங்க அரசானான துர்விநீதன், சாளுக்கிய விஷ்ணு வர்த்தனன் இவர் தம் காலத்தவன்’ என்று அந்நூல் கூறுகிறது. துர்விநீதன் கி.பி. 605இல் பட்டம் பெற்றவன்.[1] விஷ்ணுவர்த்தனன் கி.பி. 614இல் பட்டம் பெற்றவன்.[2] இவர்கள் அரசராக இருந்தபொழுது சிம்மவிஷ்ணுவும் அரசனாக இருந்தான் என்று மேற்சொன்ன நூல் கூறலால் சிம்மவிஷ்ணு குறைந்தது கி.பி. 615 வரையேனும் அரசானக இருந்திருத்தல் வேண்டும்.

சிம்மவிஷ்ணு சிறப்பு

இவன் மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளமை காண்க; “சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலை போன்றவன். அவன் நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப் போன்றவன்:செல்வத்தில் குபேரனைஒத்தவன்.அவன்அரசர் ஏறு.”[3]


  1. Dr.V. Venkataramanayya’s article on “Durvinita and Vikaramadiytal’ (Triveni).
  2. Same Scholar’s article on “Mahendravarman and pullikects II, Miscellany of Paper’s published byGVR Pantulu’s 70th Birthday Celebration Committee.
  3. Mattavilasam (Sanskrit), P3.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/98&oldid=583619" இலிருந்து மீள்விக்கப்பட்டது