பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


 பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதென்றால், முதலில் பணம் கட்ட வேண்டும்; நன்கொடை கொடுக்க வேண்டும்; சீருடை தைக்க வேண்டும்; இதற்கெல்லாம் பணம் வேண்டுமே! அந்தச் சிட்டு எங்கே போகும்?

ஒரு நாள் மாலை நேரம். தென்றல் சிலு சிலு வென்று வீசிக்கொண்டிருந்தது. கதிரவன் செம்மஞ்சள் நிறத்தோடு மேற்குத் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்தப் பள்ளிக்கூடத்துத் தலைமையாசிரியை எதிரில் உள்ள புல்வெளியில் நடந்து கொண்டிருந்தாள்.

அம்மாச் சிட்டு அந்த வழியாகப் பறந்து வந்தது. தலைமை ஆசிரியையைப் பார்த்தவுடன், மெல்லக் கீழே இறங்கியது. அவள் நடந்து வரும் போது எதிரில் புல்வெளியில் வந்து நின்று கொண்டது.

'அம்மா அம்மா’ என்று கூப்பிட்டது சிட்டு.

தலைமையாசிரியை திரும்பிப் பார்த்தாள். யாரும் காணப்படவில்லை.