பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலத்தில் பெருவாரியாகச் செய்தனர். சோம பானத்தைக் கொண்டு சோமயாகம் செய்து சோமயாஜி என்று பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான சோமயாஜிப் பிராமணரைப் பாண்டியர் செப்பேடுகளும் பல்லவர் செப்பேடுகளும் கூறுகின்றன. சோமயாஜிப் பார்ப்பனன் ஒருவன் சோம பானத்தைக் குடித்துக் குடித்துத் தம்முடைய மனத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டதாக (மனோ அத்தர் ஆகியதாக!) ஒரு பாண்டிய செப்பேட்டுச் சாசனம் கூறுகின்றது. (தளவாய்புரச் செப்பேடு , வரி 138.) ஆனால் நம்முடைய இப்போதைய ஆய்வு சங்க காலத்தோடு மட்டும் நிற்கிறபடியால் அந்த ஆராய்ச்சிக்குப் போக வேண்டியதில்லை.

சங்க காலத்துத் தமிழகத்திலே கள்ளும் மதுவும் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவில்லை. உள் நாட்டிலேயே செலவாயின. கள், தேறல், தோப்பி, பிழி, நறவு, மகிழ், மட்டு முதலான பெயர்கள் மதுபானங்களுக்குப் பெயராகக் கூறப்பட்டுள்ளன. 'தெண் கட்டேறல்' (அகம், 336:6), 'பாப்புக் கடுப்பன்ன தோப்பி' (அகம், 348:7), 'பாம்பு வெகுண்டன்ன தேறல்' (சிறுபாண் - 237), 'தண்கமழ் தேறல்' (புறம், 24), 'மணங் சுமழ் தேறல்' (மதுரை, 780), 'பூக்கமழ் தேறல்' (பொரு நர், 157), 'இன்களி நறவு' (அகம், 173:16), 'தீந்தண் நறவம்' (புறம் , 292), ' மண நாறு தேறல்' (புறம், 397: 14), 'அரவு வெகுண்டன்ன தேறல்' (புறம், 736:14), 'மகிழ்தரல் மரபின் மட்டு' (புறம், 390:16) என்று சங்கச் செய்யுட்கள் மதுபானங்களைப் புகழ்கின்றன.

தென்னை பனை மரங்களிலிருந்து கள் இறக்கப்பட்டது. நெல், தினை முதவான தானியங்களிலிருந்து மது வகைகள் உண்டாக்கப்பட்டன. 'கொழு மடல் தெங்கின் விளைபூந் தேறல்' (மணி, 3:89) என்று தென்னங்கள் கூறப்படுகின்றது. 'இரும் பனம் தீம்பிழி' (நற், 38:3) என்றும், 'பிணர்ப் பெண்ணைப் பிழி' (பட்டினப், 89) என்றும், 'நுளை மகள் அரித்த பழம்படு தேறல்' (சிறுபாண், 58) என்றும், 'இரும் பனம் தீம்பிழி யுண்போர் மகிழும்' (நற், 38:8) என்றும் பனங்கள் கூறப்படுகின்றது.

106