பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொற்காசுகளை மாலையாகச் செய்து மகளிர் அரையைச் சுற்றி (மேகலை போல) அணிந்து கொண்டதைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் கூறுகிறார் .

'ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்.'

(புறம், 353; 1-2)

காசுகளை மாலையாகச் செய்து அரையில் அணிந்திருந்த பெண் ஒருத்தியை மதுரைப் போத்தனார் கூறுகிருர்.

'அம்மா மேனி ஐதமை நுகப்பில்
பல்காக நிரைத்த கோடேந் தல்குல்
மெல்லியல் குறுமகள்.'

(அகம், 75: 18-20)

(ஐது-அழகிய; நுசுப்பு-இடுப்பு, இடை; குறுமகள் -இளம் பெண்)

காசுமாலை அணிந்த இன்னொரு பெண்ணை ஓதலாந்தையார் கூறுகிறார்.

பொலம் பசும் பாண்டிற் காசு நிறை அல்குல்
இலங்குவளை மென்றோள்,

(ஐங்குறு, பாலை, செலவழுங்குவித்த பத்து 10)

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரனைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்க்கு 40 நூறாயிரம் பொன் (நான்கு இலட்சம்) அவன் பரிசாகக் கொடுத்தான் என்று கூறப்படுகிறது (பதிற்றுப் பத்து, நான்காம் பத்து, பதிகம்). இங்குப் பொன் என்பது பொற்காசு என்று தோன்றுகிறது. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்மேல் 6 ஆம் பத்துப் பாடிய காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்க்கு அவ்வாகன், நகை செய்து அணிவதற்காக ஒன்பது காப்பொன்னையும் நூறாயிரம் காணமும் (காணம்-அக்காலத்தில் வழங்கின பொற்காசு) கொடுத்தான். செல்வக் கடுங்கோவாழியாதனைப் பாடிய கபிலருக்குப் பரிசாக அவ்வரசன் நூருயிரம் காணம் வழங்கினான் என்று ஏழாம் பத்துப் பதிகம் கூறுகிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் பரிசாகக் கொடுத்தான் என்பதைப் பதிற்றுப்பத்து 8 ஆம் பத்துப் பதிகத்தினால் அறி

20