பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூறுவது அச்செய்யுட்கள் இயற்றப்பட்டதன் நோக்கமும் அன்று. தற்செயலாகத் தமிழகத்தின் சில துறைமுகப் பட்டங்களை அச்செய்யுட்களில் சில கூறுகின்றன. அச் செய்யுட்கள் கூறாத வேறு சில துறைமுகப் பட்டினங்களும் இருந்தன. உதாரணமாக எயிற் பட்டிணமாகிய சோ பட்டினத்துக்கும் (இப்போதைய மரக்காணம்) காவிரிப்பூம் பட்டினத்துக்கும் இடையில் ஒரு துறைமுகமும் யவனரின் பண்டகசாலையும் இருந்தன. சோ பட்டினத்தையும் காவிரிப் பூம்பட்டினத்தயும் கூறுகிற சங்கச் செய்யுட்கள் இந்தத் துறைமுகத்தைக் கூறவில்லை. ஆனால், பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூலில் இந்தத் துறைமுகம் கூறப்பட்டுள்ளது. இத் துறைமுகத்தை அந்நூல் போதவுகே (Podukc) என்று கூறுகிறது. புதுச்சேரிக்குத் தெற்கேயுள்ள அரிக்கமேடு என்னும் மண்மேட்டை 1945 இல் தொல்பொருள் ஆய்வாளர் அகழ்ந்து பார்த்தபோது அங்குக் கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பொருள்களும் யவனர் (கிரேக்க-ரோமர்)களின் அக்காலத்துப் பொருள்களும் கிடைத்தன. அந்த இடம் அக்காலத்தில் துறைமுகமாகவும் பண்டகசாலையாகவும் இருந்தது என்பது வெளியாயிற்று. பெரிப்ளூஸ் நூல் கூறுகிற 'போதவுகே' துறைமுகம் இதுதான் என்பதும் இப்போது அறியப்படுகிறது. ஆகவே, சங்கச் செய்யுட்களில் கூறப்படாத வேறு சில துறைமுகப்பட்டினங்களும் இருந்தன என்பதும் அவற்றில் கொல்லத்துறையும் ஒன்று என்பதும் தெரிகின்றது.

கொல்லத்துறை கடைச்சங்க காலத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. அங்குக் கடல் வாணிகமும் நடைபெற்றது. யவனர் கப்பல்களில் வந்து அங்கு வாணிகம் செய்தார்கள். அதற்குச் சான்றாக, அத்துறைக்கு மேற்கேயுள்ள பழைய பட்டினமாகிய நெல்லூரில் கிடைத்த உரோம் தேசத்துப் பழங்காசுகள் கிடைத்துள்ளன, உரோம் தேசத்துப் பழங்காசுகள் அடங்கிய ஒரு பானைப் புதையல் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது. கொல்லத்துறைத் துறைமுகத்துக்கு அருகிலேயுள்ள நெல்லூரில் கிடைந்த

66