பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலங்கரை விளக்கு நிலையம் உயரமான கட்டடமாக (வானம் ஊன்றிய மதலை போல) இருந்தது. அது சாந்து (சுண்ணம்) பூசப்பட்டு தள வரிசையுள்ளதாக (வேயா மாடமாக) இருந்தது. அதன் உச்சியில் இராக் காலத்தில் தீயிட்டு எரித்தார்கள். உச்சியில் ஏறி விளக்கு ஏற்றுவதற்கு (தீ ஏற்றுவதற்கு) ஏணிப்படிகள் இருந்தன. இவ்வாறு கலங்கரை விளக்கின் அமைப்பு கூறப்படுகின்றது.

காவிரிப்பூம் பட்டினத்தின் துறைமுகத்திலும் அக்காலத்தில் கலங்கரை விளக்கு நிலையம் கட்டப்பட்டிருந்ததை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். 'இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்' (கடலாடு காதை, 141) இதற்குப் பழைய அரும்பத உரையாசிரியர் பொருள் கூறுவது இது. 'கலங்கரை விளக்கம்--திக்குக் குறிகாட்டிக் கலத்தை (நாவாய்களை) அழைக்கிற விளக்கம்' இன்னொரு உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், 'நிலையறியாது ஓடுங் கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு' என்று உரை எழுதியுள்ளார்.

துறைமுகங்கள் தோறும் கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டிருந்தன. அவை உயரமாக மணல் மேட்டின் மேல் கட்டப்பட்டிருந்தன. மீகாமர் கலங்கரை விளக்கின் உதவியினால் மரக்கலங்களை இராக்காலத்தில் துறைமுகங்களுக்கு ஓட்டினார்கள். கலங்கரை விளக்குக்கு மாடவெள்ளொரி என்ற பெயரை மருதன் இளநாகனார் கூறுகிறார்.

'உலகுகிளர்ந் தன்ன உருகெழுவங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான்
மாடவெள்ளொரி மருங்கறிந்து ஒய்யா'

(அகம், 255: 1-6)

இதனால் எயிற் பட்டினம் முதலான துறைமுகங்களில் கலங்கரை விளக்குகள் இருந்தமை தெரிகிறது. எயிற் பட்டினத் துறைமுகத்தைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.

69