பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடகடலின் (அரபிக் கடலின்) கரையில் இருந்தன. அக்காலத்தில் வடக்கே இருந்த பேர்போன துறைமுகம் மின்னகரம் என்பது. மின்னகரம் சிந்துநதி கடலில் சேரும் புகர் முகத்தில் இருந்தது. அதற்குத் தெற்கே புரோச் (Broach) என்னும் பாரிகச்சத் துறைமுகமும், சோபாரா ' சூரத்துத்' துறைமுகமும் இருந்தன. இந்தத் துறைமுகங்களில் அராபிய, யவன வாணிகர்கள் மேற்கிலிருந்து வந்து வாணிகம் செய்தார்கள். இந்தத் துறைமுகங்கள் அக்காலத்தில் அப்பகுதிகளையரசாண்ட சதகர்ணி (சாத வாகன) அரசர்களுக்குரியவை. இந்தத்துறைமுகங்களைக் கைப்பற்றச் சாகர் என்னும் அரசர்கள் சதகர்ணி அரசர்களோடு அடிக்கடி போர் செய்து கொண்டிருந்தார்கள். இத்துறைமுகங்கள் சில காலம் சதகர்ணிகளுக்கும் சில காலம் சாகர்களுக்கும் உரியதாக இருந்தன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இவ்விதமாக இந்தத் துறைமுகப் பட்டினங்கள் இருவர் ஆட்சியிலும் மாறிக் கொண்டிருந்தன,

அக்காலத் தமிழகம், மேற்குக் கரையில் துளு நாட்டையும் (தென் கன்னட வட கன்னட மாவட்டங்கள்) தன்னகத்தே கொண்டிருந்தது. தமிழகத்தின் மேற்குக் கரையில் வடகோடியிலிருந்த அக்காலத்துத் துறைமுகப் பட்டினம் மங்களூர். மங்களூர் இப்போதும் சிறிய துறைமுகமாக இருக்கின்றது. ஆனால் சங்க காலத்தில் அது பெரிய பேர் போனத் துறைமுகமாக இருந்தது. துளு நாட்டை அக்காலத்தில் நன்னன் என்னும் பெயருள்ள வேள் அரசர்கள் அரசாண்டார்கள். மங்களூருக்குத் தெற்கே இருந்த துறைமுகப் பட்டினம் நறவு. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்திருந்தது.

நறவுக்குத் தெற்கே தொண்டி, பரக்கெ, நீல்கண்ட முதலான துறைமுகங்கள் இருந்தன. இவை சேர நாட்டைச் சேர்ந்த துறைமுகங்கள். இத்துறைமுகங்களைப் பற்றிக் கூறுவோம்.

மங்களூர்

சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது துளுநாடு, துளுநாட்டை நன்னன் என்னும் பெயருள்ள

89