பக்கம்:பழைய கணக்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

“ஆமாம்; அதெப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்றேன் நான் வியப்புடன்.

“இந்த மாதிரி என் வீட்டுக்கு வருகிறவர்களுக்கெல்லாம் இந்தப் பழத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்கிறேன். அவரவர்கள் தங்கள் மாவட்டதில் எந்த வகை வாழைப்பழம் கிடைக்கிறதோ அந்தப் பெயரைச் சொல்லி அது மாதிரி இருக்கிறது என்கிறார்கள். அந்த ருசி ஒன்றுதான் அவர்களுக்குப் பழக்கமானதால் அப்படிச் சொல்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, அவர்கள் பழத்தின் பெயரைச் சொன்னதும் எனக்கு அது விளையும் மாவட்டம் தெரிந்து விடுகிறது! அதனால் தான் இப்போது நீங்கள் ரஸ்தாளி என்றதும் வடஆற்காடு என்று சொல்லி விட்டேன்” என்று கூறிச் சிரித்தார்.

“அப்படியானால் உண்மையிலேயே இது என்ன ஜாதி?” என்று கேட்டேன்.

“இது எந்த ஜாதியும் இல்லை. தனி ஜாதி. கோபால் கல்யாணத்தின் போது அப்பளத்தின் மீது குழாய்த் தண்ணிர் கொட்டியது ஞாபகம் இருக்கிறதா? தண்ணீரில் ஊறிப் போன அந்த அப்பளங்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்து மூன்றாவது நாள் வெளியே எடுத்தேன். என் தோட்டத்திலுள்ள வாழை மரங்களின் அடிப்பாகத்தில் துப்பாக்கியால் சுட்டுத் துளைகள் செய்தேன். அந்தத் துளைகளில் ஊறிய அப்பளங்களைப் போட்டு அடைத்தேன். ஆச்சரியப்படும் அளவுக்கு மரம் வேகமாக வளர்ந்து, பழங்கள் பெரிதாகவும் ரொம்ப ருசியாகவும் இருக்கின்றன. அந்தப் பழம்தான் நீங்கள் இப்போது சாப்பிட்டது. இப்படித்தான் நான் எதையாவது செய்யப்போக அதுவே ஒரு புதுமை கலந்த விந்தையாகி விடுகிறது. உடனே தாவர விஞ்ஞானி நாயுடு என்று உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எனக்குப் பட்டம் சூட்டி விடுகிருர்கள்” என்றார் நாயுடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/101&oldid=1146088" இலிருந்து மீள்விக்கப்பட்டது