பக்கம்:பழைய கணக்கு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

ராத்திரி ராமாயணம் படிக்கப் போகிறோம் என்ற பெருமிதத்தில் அன்றெல்லாம் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தேன்.

வேலை வெட்டி இல்லாமல், வெறும் உதவாக்கரையாய், தண்டச் சோற்றுக் கடனாய் ஊர் திரிந்து கொண்டிருக்கிறேன் என்று என் தாயார் அடிக்கடி என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

அம்மாவிடம் நாளைக்கு நாலுபேர் பெருமையாகச் சொல்வார்கள், “உங்க பிள்ளை ராத்திரி ராமாயணம் படிச்சாரு, ரொம்ப நன்றாயிருந்தது” என்று. அதைக் கேட்டு அம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருக்கும்! ஆகையால் ராமாயணம் படிக்கப் போகிற செய்தியை இப்போதே அம்மாவிடம் சொல்லி அந்த ஆச்சரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது. அதை ஒரு சஸ்பென்ஸாக வைத்திருக்க வேண்டும் என்று பேசாமலிருந்து விட்டேன்.

மாலை ஏழு மணிக்குக் குளித்து விபூதிப் பட்டையுடன் சிவப்பழமாகப் பெருமாள் கோவில் மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன். குத்து விளக்கு அருகில் உட்கார்ந்து சிக்குப் பலகை வைத்துக் கொண்டு ராமாயண சுலோகங்களைச் செவ்வனே படித்து முடித்தேன். இடை இடையே சுலோகங்களை வேகமாகப் படிக்க முடியாதபோது ராகத்தை நீட்டி ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டேன். ராமாயணம் கேட்க வந்தவர்கள் என்னைப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள். எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. குடுமி மீது இருந்த கோபம் கூடக் கொஞ்சம் குறைந்தது!

உபந்நியாசம் முடிந்ததும் தட்டில் வெற்றில பாக்கும், தேங்காய் மூடியும் ஒரு ரூபாய் சன்மானமும் வைத்துக் கொடுத்தார்கள்.

அந்தத் தேங்காய் மூடியை அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து விஷயத்தைச் சொன்னபோது அம்மா பூரித்துப் போனாள். “ஏதாவது பணம் கொடுத்தார்களா?”

“ஒரு ரூபாய் கொடுத்தார்கள். நாளை நான் டவுனுக்குப் போகவேண்டும். செலவு இருக்கிறது” என்று சொல்லி விட்டேன். மறுநாள் அம்மா தேங்காயைத் துவையல் செய்திருந்தாள்.

தினமும் அம்மா கையால் சாதம் போட்டாலும் அன்று சமையல் எனக்கு ரொம்ப ருசியாக இருந்தது. காரணம் நான் முதன் முதல் சம்பாதித்த தேங்காய் மூடியில் செய்த சமையல் அல்லவா அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/127&oldid=1146118" இலிருந்து மீள்விக்கப்பட்டது