பக்கம்:பழைய கணக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொள்ளக் கூடாது என்று மேலிடத்துக் கட்டளை ஆதலால், “நான் குற்றவாளி அல்ல” என்று சொன்னேன்.

“உனக்கு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன். ‘சி’ கிளாஸ்” என்றார் மாஜிஸ்ட்ரேட்.

‘கடுங்காவல் தண்டனை’ என்று மாஜிஸ்ட்ரேட் சொன்னது எனக்கு வருத்தம் தரவில்லை. ‘சி’ கிளாஸ் என்பதுதான் மதிப்புக் குறைவாகப்பட்டது.

“எனக்கு ‘பி’ கிளாஸ் வேண்டும்” என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் வாதாடினேன்.

“அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும், அந்தஸ்து வேண்டும். உனக்கு ஏதேனும் சொத்து இருக்கிறதா?”

“கிராமத்தில் சொந்த வீடு. இருக்கிறது.”

“அது என்ன மதிப்பு பெறும்?” “இருபதாயிரம் ரூபாய்!” “கிராமத்து வீட்டுக்கு இருபதாயிரம் ரூபாயா? நம்ப முடியவில்லையே!” என்றார் மாஜிஸ்ட்ரேட்.

“அது என் வீடு. அதற்கு நான் போடும் மதிப்பு இருபதாயிரம்” என்றேன்.

மாஜிஸ்ட்ரேட் லேசாகச் சிரித்தார். “உன் நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன். ஆனால் ‘பி’ கிளாஸ் கொடுப்பதற்கில்ல” என்று கூறி விட்டார்.

பெல்லாரி அலிபுரம் சிறைச்சாலைக்குள் நுழையும் வரை இந்த ‘சி’ கிளாஸ் மனசுக்குள் உறுத்திக் கொண்டேயிருந்தது. சிறைக்குள் போனதும் அங்கே பெரிய பெரிய ஆட்களெல்லாம் ‘சி’ கிளாஸில் இருப்பதைப் பார்த்தேன். எஸ். ஏ. ரகீம், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ண ஐயர், கக்கன்ஜி போன்ற முன்னணி வீரர்களெல்லாம் கூட ‘சி’ கிளாஸில் முடங்கிக் கிடந்ததைப் பார்த்த பிறகுதான் சற்று ஆறுதல் ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/33&oldid=1145704" இலிருந்து மீள்விக்கப்பட்டது