பக்கம்:பழைய கணக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

“சிறைக்குள்ளிருக்கும் அரசியல் கைதிகள் சிறைச்சாலையையும் போராட்டக் களமாக எண்ணிச் செயல்பட வேண்டும். சிறைக் கம்பிகளை உடைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும்” என்று காந்திஜி கூறியதாக ஒரு செய்தி வந்தது. எங்களுக்கெல்லாம் இச்செய்தி தேனாக இனித்தது. காந்திஜி நிச்சயம் சொல்லியிருப்பார் என்று பேசிக் கொண்டோம். உடனே சிறைக்குள்ளேயே கூட்டம் போட்டு சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு வெளியேறுவது என்று உற்சாகத்தோடு தீர்மானம் போட்டோம்.

இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் திட்டத்தை நிறைவேற்றி விடுவது என்று ஓர் இரவு ரகசியமாகக் கூடி முடிவெடுத்தோம். நாங்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஜெயில் வார்டர் ஒருவன் இந்த விஷயத்தை ஜெயில் சூப்பரின்டெண்டிடம் போய்ச் சொல்லி விட்டான்.

அப்போது ஹெள துரை என்பவன்தான் ஜெயில் சூப்பரின்டெண்ட். மிகப் பொல்லாதவன். பிரகாசம்காரு திருச்சி சிறையில் இருந்த போது இவன் கொட்டத்தை அடக்க ஒரு நாள் அவனைச் செருப்பால் அடித்து விட்டாராம். அதிலிருந்து இவன் காங்கிரஸ்காரர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டான்.

காங்கிரஸ் கைதிகளைக் கண்டால் ‘யூ காந்தி கேப்’ என்று தலைமுடியைப் பற்றி இழுத்து அடிப்பான்.

மறு நாள் விநாயக சதுர்த்தி. முதல் நாள் இரவு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, “போன வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை சாப்பிட்டேன். இந்த வருடம் எப்படியோ?” என்று கொழுக்கட்டைக்காக ஏக்கப் பெருமூச்சு விட்டேன்.

மறுநாள் காலை எல்லோரும் கஞ்சி குடித்துவிட்டு அங்கங்கே சிறுசிறு கும்பலாய் மரத்தடிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று திங்கட்கிழமையானதால் ஏழரை ஒன்பது ராகுகாலம். திடீரென்று நூற்றுக்கணக்கான விசில்களின் ஒலி இடைவிடாமல் கேட்டது. சிறையைச் சுற்றிலும் ரிஸர்வ் போலீஸ் படை துப்பாக்கியுடன் அணிவகுத்து நின்றது.

“எல்லோரும் பிளாக்குக்குள் ஒடுங்க, ஜெயிலையா உடைக்கப் போறீங்க? இப்ப உங்க மண்டையை உடைக்கிறோம், பாருங்க” என்று கர்ஜித்துக் கொண்டே சிறை வார்டர்கள் எங்களைத் துரத்தித் துரத்தி விரட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/35&oldid=1145707" இலிருந்து மீள்விக்கப்பட்டது