பக்கம்:பழைய கணக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

எனது காய்கறி வியாபார ஐடியாவை சின்ன அண்ணாமலையிடம் வெளியிட்ட போது அவர் அதை உற்சாகத்தோடு வரவேற்றர். “உடனே புறப்படுங்கள் வேலூருக்கு?” என்றார். ஒரு காரை எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டை வரை போய் மொத்தமாகக் காய்கறிகளை வாங்கி வந்து ஊஸ்மான் ரோடு சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்தோம்.

கறிகாய் வியாபாரிகள் தொடர்ந்து போலீஸ் தொல்லைக்குள்ளாகவே ஒரு நாள் அவர்களில் சிலர் எங்களிடம் வந்து, “இதற்கு ஒரு வழி செய்யக் கூடாதா?” என்று கேட்டனர். “நீங்க கவலைப் படாதீங்க. இன்றைக்கே ஏற்பாடு செய்யறேன்” என்று சின்ன அண்ணாமலை அவர்களிடம் சொல்லி அனுப்பிவிட்டு, என்னைப் பார்த்து, “நீங்க இன்றே காமராஜ் வீட்டுக்குப் போய் அவரிடம் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுங்க. அவர் ஏதாவது வழி செய்வார்?” என்றார். அப்போது எனக்குக் காமராஜரை அவ்வளவாகத் தெரியாது. ஒரு முறையோ இரண்டு முறையோ பார்த்திருக்கிறேன், அதனால் சற்று தயங்கினேன்.

“பொது விஷயம்தானே? இதற்கென்ன தயக்கம்? போய் தைரியமாப் பேசிட்டு வாங்க” என்றார் சின்ன அண்ணாமலை.

எனக்கு ஒரே பயம். ஆனாலும் நான் புறப்பட்டு விட்டேன். என்னோடு நாலைந்து வியாபாரிகளையும் அழைத்துச் சென்றேன். திருமலைப் பிள்ளை ரோடு. காமராஜ் வீடு. பிற்பகல் வெயில் நேரம். வேப்ப மரத்தில் காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன.

“தலைவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாலு மணிக்கு எழுந்திருப்பார்” என்று தகவல் கிடைத்தது. அப்படியே எழுந்திருந்தாலும் உடனே எங்களைச் சந்திப்பார் என்பது என்ன நிச்சயம்? அவருக்கு எவ்வளவோ வேலைகள். அங்கேயே காத்துக் கிடந்தோம். காமராஜ் எழுந்து விட்டார் என்று தெரிந்ததும் அவரது கவனத்தைக் கவர ஒரு திட்டம் போட்டேன். என் கூட வந்தவர்களிடம், “நான் காமராஜ் என்பேன். நீங்கள் அனைவரும் உரத்த குரலில் ‘வாழ்க’ என்று கோஷம் போட வேண்டும். சப்தம் கேட்டு காமராஜ் கீழே வருவார். வந்தால் நாம் பேச வாய்ப்புக் கிடைக்கும்” என்றேன்.

“காமராஜ்..”

“வாழ்க!”

“காமராஜ்..”

“வாழ்க!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/58&oldid=1146000" இலிருந்து மீள்விக்கப்பட்டது