பக்கம்:பழைய கணக்கு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

எனது திட்டம் வெற்றி பெற்றது! கோஷம் கேட்டதும் தலைவர் கீழே இறங்கி வந்து விட்டார். என்னை நானே அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

“என்ன விஷயம், சொல்லுங்க” என்று கேட்டார் காமராஜ்.நான் பிரச்னையை விவரித்தேன்.

“இவங்களுக்குப் போலீஸ் தொல்லை தரக் கூடாது. அன்றாடம் வியாபாரம் நடந்தால்தான் இவர்கள் வீட்டில் அடுப்பெரியும். அவ்வளவுதானே? வேறே அங்கே ஏதாவது இடம் இருக்கா? இவங்க வியாபாரத்தை அங்கே நடத்த முடியுமா?” என்று கேட்டார். “பனகல் பார்க்கைச் சுற்றி விசாலமான பிளாட்பாரம் இருக்கிறது. அங்கே நடத்தலாம்” என்றேன்.

சிறிது நேரம் யோசித்தார். உடனே டெலிபோன் அருகே போனார். அப்போது கார்ப்பரேஷனில் உயர் அதிகாரியாக இருந்த சத்தியமூர்த்தி என்பவரைக் கூப்பிட்டார்.

“இத பார், சத்தியமூர்த்தி! உஸ்மான் ரோடு காய்கறி வியாபாரிகள் இனிமேல் பனகல் பார்க் பிளாட்பாரத்தில் வைத்து வியாபாரம் செய்வதற்கு ஏற்பாடு பண்ணு. ஒரு கடைக்கு இவ்வளவு காசு என்று வேண்டுமானல் கார்ப்பரேஷன்ல வசூல் பண்ணிக்குங்க. நாளையிலிருந்து அவங்க கிட்ட போலீஸ் போகக் கூடாது. யாரிட்டே என்ன பேசனுமோ பேசிக்க” என்று சொல்லிப் போனை வைத்து விட்டார்.

“சாி. சரி நீங்க போங்க. நாளேயிலிருந்து பனகல் பார்க் பிளாட்பாரத்திலே விக்கட்டும்” என்றார் என்னைப் பார்த்து. எனக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். அதற்குப் பிறகு சின்ன அண்ணாமலையும் ஒரு முறை காமராஜரைப் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்தார். வந்ததும் வியாபாரிகளுக்கு பனகல் பார்க் பிளாட்பாரத்தில் வரிசையாக இடம் ஒதுக்கி ஒழுங்குபடுத்தினர். புதிதாக அமைந்த அந்த மார்க்கெட்டை ‘சின்ன அண்ணாமலை மார்க்கெட்’ என்று கூடச் சில நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர் பெயரில் ஒரு போர்டு கூட ஏதோ ஒரு மூலையில் இருந்ததாக ஞாபகம்.

இப்போது அங்கே கார்ப்பரேஷன் ‘பக்கா’வாக ஒரு கட்டிடத்தையும் கட்டி சென்னையின் மிகச் சிறந்த காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றாக்கியுள்ளது. அந்தப் பக்கம் நான் போகும் போதெல்லாம், எனக்கு காமராஜின் குரல் கேட்கும்: “...நாளையிலிருந்து அவங்க கிட்ட போலீஸ் போகக் கூடாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/59&oldid=1146001" இலிருந்து மீள்விக்கப்பட்டது