பக்கம்:பழைய கணக்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

“அதெல்லாம் ஒன்றுமில்லை. வேலையை ஒப்புக்கொள்ளுமுன் ஒருமுறை என் தந்தையைப் பார்த்துப் பேசி விடுங்களேன்” என்றார். அவருடைய தந்தை ராம்நாத் கோயங்கா சென்னைக்கு எப்போதாவதுதான் வந்து போய்க் கொண்டிருந்தார். ஆகவே அவரைச் சந்திப்பதில் வீண் கால தாமதம் ஆயிற்று.

“தாங்கள் தானே என்னைக் கூப்பிட்டனுப்பினீர்கள்? அப்புறம் அவரைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?” என்று பி. டி. கோயங்காவிடம் கேட்டேன்.

“சும்மாத்தான். இப்போது ஜவுளி வாங்கக் காஞ்சிபுரம் போகிறோம். அப்படியே கோவிலுக்குப் போய் பெருமாளைச் சேவித்து விட்டு வருவதில்லையா? அந்த மாதிரிதான். அப்பாவைப் பார்ப்பது என்பது சம்பிரதாயத்துக்குத்தான்” என்றார்.

அவர் கூறிய உதாரணமும், பேசிய தமிழும் என்னை வியப்பில் ஆழ்த்தின. கடைசியில் ராம்நாத் கோயங்காவைப் பார்க்காமலே தான் வேலையில் சேர்ந்தேன்.

வேலையில் சேர்ந்த முதல் நாள் அன்று பி. டி. ஜி. என்னைத் தம் அறைக்கு அழைத்து, “உன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். எனக்கு அடிக்கடி கோபம் வரும், அம்மாதிரி சமயங்களில் சத்தம் போடுவேன். எப்போதாவது நான் கோபித்துக் கொள்ள நேரிட்டால் அதை நீ பொருட்படுத்தக் கூடாது” என்றார்.

“எனக்கும்தான் அடிக்கடி கோபம் வரும். என் கோபத்தையும் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது” என்று பதிலுக்கு நான் சொன்ன போது அவர் சிரித்து விட்டார்!

பி. டி. ஜி. தினமும் காலை வேளையில் எம். எஸ். ஸின் சுப்ரபாதம் கேட்டுக் கொண்டே தம்முடைய எக்ஸ்பிரஸ் தோட்டத்தில் ‘வாக்கிங்’ போவது வழக்கம். ரொம்ப வேகமாகத்தான் நடப்பார். அவர் நடக்கும் போது சில சமயங்களில் நான் கூடவே பேசிக் கொண்டு போவதுண்டு. அவர் வேகத்துக்கு என்னால் நடக்க முடிவதில்லை.

ஒரு நாள் காலை நான் அவரைப் பார்க்கப் போயிருந்த போது, “ஏம்பா, ராத்திரியெல்லாம் உன் டிபார்ட்மெண்ட்டில் விளக்கு எரிகிறதே, ஏன்?” என்று கேட்டார்.

“ஆமாம்; வேலை நிறைய இருக்கிறது. இரவில் வேலை செய்வதை உதவி ஆசிரியர்கள் கூட விரும்பவில்லைதான், ஆனாலும் என்ன செய்வது? இம்மாதிரி ரொம்ப நாள் நடக்காது......" என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/61&oldid=1146003" இலிருந்து மீள்விக்கப்பட்டது