பக்கம்:பழைய கணக்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வள்ளுவருக்கும் அவ்வளவுதானா?

நான் ஆனந்த விகடனில் சேர்ந்தபோது அங்கே நிலவி வந்த ஒரு வழக்கம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அப்போதெல்லாம் கதையோ கட்டுரையோ எது பிரசுரமானாலும் அதற்கான சன்மானத்தை நிர்ணயிக்க அவற்றின் நீளத்தை ‘ஸ்கேல்’ வைத்து அளந்து பார்ப்பார்கள். அங்குலத்துக்கு இவ்வளவு என்று சன்மானத் தொகை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கதை இருபது அங்குல நீளத்துக்குப் பிரசுரமாகி இருந்தால் அதற்கு நாற்பது ரூபாய் என்று பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தேவன் காலத்தில் தொடங்கிய இந்த வழக்கம் தேவன் மறைந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த முறை சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

ஒரு விவாதத்தின் போது இதைப் பற்றி திரு வாசன் அவர்களுடைய மகன் திரு பாலசுப்ரமணியனிடம் கேட்டேன்.

“இது சரியான முறையாகத் தோன்ற வில்லையே! ஒரு எழுத்தாளரின் படைப்பு எவ்வளவு சன்மானம் பெற வேண்டும் என்பதை அந்த எழுத்தாளரின் எழுத்தின் தரத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்க வேண்டுமே தவிர நீளத்தை வைத்து அல்ல” என்றேன்.

“இதில் ஒரு நன்மை இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்று நினைக்கிறேன். ஒரு அங்குலத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து விடும் போது வேண்டியவர், வேண்டாதவர் என்கிற பிரச்னையெல்லாம் வராது. யார் எழுத்தையும் சமநோக்குடன் பார்ப்பதற்கு வசதியாகவும் ஏற்றத் தாழ்வு வித்தியாசத்துக்கு இடமில்லாமலும் போய்விடும்" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/79&oldid=1146022" இலிருந்து மீள்விக்கப்பட்டது