பக்கம்:பழைய கணக்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

நந்தனார் படம் வெளியானதும் கல்கி அதற்கு ஒரு விமரிசனம் எழுதினர். விமரிசனம் வெளியானதும் எல்லாரும் படத்தை மறந்து விட்டு விமரிசனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்! அதே போல அவரது ‘தியாக பூமி’ கதை படமாக வெளியான போது விமரிசகர்களின் பேனா கல்கியைக் கொஞ்சம் கடுமையாகவே விமரிசித்தது. இவரும் விடவில்லே. அவற்றுக்குச் சுடச்சுடப் பதில் தர ஆரம்பித்தார். விமரிசகர்களும் கல்கியும் மாறி மாறிப் போட்ட எழுத்துச் சண்டை அப்போது வாசகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக் காட்டிலும் சுவாரசியம் மிக்க ஒரு ‘காண்ட்ரவர்ஸி’யை நான் அப்புறம் பார்க்கவில்லை.

என்னுள் நகைச்சுவை உணர்ச்சி இருப்பதைக் கண்டுபிடித்து என்னை முதன் முதல் ஊக்குவித்தவர் கல்கி அவர்களே. ஒரு முறை கல்கி தோட்டத்தில் அவர் உலவிக் கொண்டிருந்த போது என்னை அழைத்து, “நீ ஒரு ஹாஸ்யத் தொடர் எழுத முயற்சி பண்ணலாமே. உனக்கு ஹ்யூமர் சரளமாக வருகிறதே” என்றார்.

ஓர் இன்ப அதிர்ச்சிக்கு நான் ஆளானேன். கல்கியே என்னைப் பற்றி இப்படி ஒரு கணிப்பு வைத்திருந்தது எனக்கு மிகப் பெரிய வியப்பாயிருந்தது.

உடனடியாக நான் எனது அந்தத் திறமையைச் சோதித்துப் பார்க்கவில்லை யென்றாலும் கல்கியின் வார்த்தை மனதின் ஒரு மூலையில் வேலை செய்து கொண்டேயிருந்தது. அந்தத் தெம்பு தான் பின்னொரு காலம் என் கற்பனையில் ‘வாஷிங்டனில் திருமண’த்தை உருவாக்கித் தந்தது. ‘வாஷிங்டனில் திருமணத்’தைப் படித்து விட்டு என்னைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். ஆனாலும் எத்தனை பேர் பாராட்டினாலும் எனக்கு ஒரு பெரிய குறை இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. அது. "நகைச்சுவையுடன் எழுது” என்று என்னை எழுதத் தூண்டிய கல்கி அவர்கள் ‘வாஷிங்டனில் திருமண’த்தைப் படித்துப் பார்க்க உயிரோடு இல்லாமல் போய் விட்டாரே என்பதுதான். யார் புகழ்ந்தாலும் கல்கி பாராட்டுவதற்கு இணையாகுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/89&oldid=1146033" இலிருந்து மீள்விக்கப்பட்டது