பக்கம்:பழைய கணக்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அப்புறம் சில மாதங்களுக்குள்ளாகவே நான் கல்கியிலிருந்து விலகி விகடனில் சேர்ந்து விட்டேன். அங்கே போனதுமே ‘முத்திரைக் கதை’ என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்று கூறினேன். நல்ல சிறுகதைகளுக்கு விகடனின் சிறப்பு முத்திரையிட்டு நூறு ரூபாய் சன்மானம் கொடுக்க வேண்டுமென்பதே அந்தத் திட்டம். பின்னால் இந்த முத்திரை ஜெயகாந்தன் கதைகளுக்கு மட்டுமே தொடர்ந்து குத்தப்பட்டுக் கொண்டிருந்தது எனக்குப் பிடிக்காததால் அப்புறம் நான் இதில் தலையிடுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன்.

எழுத்தாளர்களுக்கு நிறைய சன்மானம் தரவேண்டும் என்ற என் ஆசையை நான் எங்கெங்கே பணி புரிந்தேனோ அங்கெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். பின்னர் ‘தினமணி கதிர்’ ஆசிரியரான போது ‘நட்சத்திரக் கதை’யை அறிமுகப்படுத்தி அந்தக் கதைக்கு இருநூற்று ஐம்பது ருபாய் சன்மானம் தருவதென்று முடிவு செய்தேன். அதைப் பார்த்துவிட்டு ஆனந்த விகடன் தன் முத்திரைக் கதைக்கான அன்பளிப்பை ஐந்நூறு ரூபாயாக உயர்த்தியது. இதை நான் அப்போது ஆசிரியராக இருந்த பத்திரிகைக்குப் போட்டியாகக் கருதவில்லை. மாறாக என் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது, காரணம், எப்படியோ எழுத்தாளர்களின் சன்மானம் ரூபாய் ஐந்நூறு வரை உயர்ந்து என் அடிப்படை நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா!

கல்கியில் நான் ஆரம்பித்த ஒரு சிறிய திட்டம் இப்படிப் படிப்படியாக வளர்ந்து ஒரு சிறுகதை ஐந்நூறு ரூபாய் பெறுகிற அளவுக்கு உயர்ந்து அதன் மூலம் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும் உயர்ந்ததில் நான் அடைந்த பெருமகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் அளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/91&oldid=1146035" இலிருந்து மீள்விக்கப்பட்டது