பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

பாண்டிமாதேவி / முதல் பாகம்


எழுந்த ஆவல் இப்போது இருந்த இடம் தெரியாமல் வற்றிப் போய்விட்டது.

ஆனால் என்ன துரதிர்ஷ்டம்? அந்த வழியின் படிக்கட்டு இருந்த திசை புரியாமல் மண்டபத்துக்குள்ளே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான் அவன். “சரி! விடிகிறவரை இப்படியே சுற்றி அலைக்கழித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்! விடிந்தால் மட்டும் என்ன? இதற்குள் வெளிச்சமா வரப்போகிறது. இதற்குள் பகலானாலும், இரவானாலும் ஒரே மாதிரித்தான் இருக்கப்போகிறது” - என்று எண்ணிப் பரிதவிப்பின் எல்லைக்கு அவன் மனம் வந்துவிட்ட போதில் அந்த வழி அவன் கால்களில் இடறியது. ‘அப்பா! பிழைத்தோம்!’ என்று எண்ணி மேலே ஏறிச் சென்றான்.

அந்தச் சுரங்கப் பாதையில் தவித்துத் தடுமாறி இறுதியாக வசந்த மண்டபத்துத் தோட்டத்திலுள்ள இடிபாடடைந்த கோவிலுக்குள் வந்து நின்றான். அந்த வழி அவனை அங்கேதான் கொண்டு வந்து விட்டது.

தனக்கு முன்னால் மகாமண்டலேசுவரர், இளவரசர் ஆகியோர் ஏறி வந்த வழி அதுதானா? அல்லது அவர்கள் ஏறிச்சென்ற வழி வேறொன்றா? என்று சந்தேகமாயிருந்தது அவனுக்கு. அங்கு நின்று சிந்தனையில் லயித்துத் தடுமாறியது அவன் உள்ளம்.

“எதற்காக இந்த ஏற்பாடுகள்? இவ்வளவு மறைவாக ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் மகாமண்டலேசுவர் சேகரித்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? தென்பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்களுக்கும், படைகளுக்கும் பொறுப்பாளியாக இருக்கும் எனக்கும், மகாராணியாரைப் போன்று நாட்டின் உரிமையைச் சொந்தமாகக் கொண்டிருப்பவருக்கும் தெரியாமல் இவ்வளவு மறைவான காரியங்களை எந்த ஒர் அந்தரங்க நோக்கத்துடன் இவர் செய்துகொண்டிருக்க முடியும்? இவைதான் போகட்டும்! இவற்றுக்காகவெல்லாம் கூட இந்த மனிதரை மகாராணி வானவன்மாதேவியாரின் பெருந்தன்மை மிகுந்த உள்ளம் மன்னித்து விடுவதற்குத் தயங்காது.