பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

169


மலர் கொய்து வரவேண்டும்” என்று குழல்மொழி துறவியை அவசரப் படுத்தினாள்.

அவர் சிரித்துக்கொண்டே அவளைப் பின்பற்றி நடந்தார். குழல்மொழி அன்னம்போல் நடந்து சென்ற நடையின் அழகைக் கவியின் கண்களோடு பார்த்தார் துறவி. பாம்புப் படம்போல் விரிந்து சுருங்கிய அந்த நடையின் பின்புறக் காட்சி, மலர் சூடிய கரிகுழல், ஆமையின் புறவடிபோல் செவ்விய பாதங்கள் பெயர்த்து நடந்த பெருமை அத்தனை அழகையும் கண் குளிர நோக்கிக்கொண்டே அவளுக்குப் பின்னால் மெல்லச் சென்றார் அவர்.

வழியில் ஒருமுறை பின்னால் திரும்பி அவரைப் பார்த்தாள் அவள். அவர் முறுவல் புரிந்தார். காரணமில்லாமல் சும்மா பார்த்ததாக அவர் எண்ணிக்கொள்ளக் கூடாது என்பதற்காக “அடிகளே! தாங்கள் வழக்கமாக எந்த மலர்களைக் கொண்டு பூசையில் வழிபடுவீர்கள் என்று நான் அறிந்துகொள்ளலாமா?” என்று கேட்டாள்.

“பயப்படாதே, பெண்னே! இந்த இடையாற்று மங்கலம் தீவில் இல்லாத மலரின் பெயரெதையாவது சொல்லி உன்னைத் திண்டாட வைத்துவிட மாட்டேன் நான்.”

“ஏன்? அடிகள் கேட்டுப் பார்ப்பதுதானே? இந்தத் தீவில் இல்லாத மலர்களே கிடையாதென்பது அடிகளுக்குத் தெரியாது போலும்!”

“இதோ, எனக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிறதே; இந்த மலரையும் சேர்த்துத்தானே சொல்கிறாய்?"துறவி குறும்புப் பார்வையோடு சுட்டுவிரலை அவள் பக்கமாக நீட்டிக காட்டினார். குழல்மொழி விருட்டென்று, திரும்பினாள். இரு விழிகளும் மலர்ந்து விரிய அவருடைய முகத்தைப் பார்த்தாள்.

“நீ கோபித்துக்கொள்ளதே. தவறாக வேறொன்றும் கூறிவிடவில்லை. உன்னை ஒரு மலராக உருவகம் செய்து கூறினேன்” என்றார் துறவி.

“ஓகோ உருவகம், உவமை - இந்தமாதிரிக் கவிதைத் துறையில்கூட அடிகளுக்கு அனுபவம் அதிகமோ?"