பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

205


“நேரே முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் அங்கே பகல் உணவை முடித்துக் கொள்ளலாம். அறக்கோட்டத்தில் இருப்பவன்கூட நாராயணன் சேந்தனின் தமையனான அண்டராதித்த வைணவன்தானே? அவனிடமே அவனுடைய தம்பி செய்த வஞ்சனையை விவரித்து நம்முடைய அவசர நிலையையும் கூறி ஒரு குதிரை சம்பாதித்துத் தருமாறு கேட்கலாம். நாராயணன் சேந்தனைப்போல் அடங்காப்பிடாரி இல்லை, அவன் தமையன். பரம சாது, அப்பாவி மனிதனுங்கூட. நாம் சொன்னால் உடனே கேட்பான்” என்று எண்ணியவனாக ஊருக்குள் நுழைந்து அறக்கோட்டத்துக்குச் செல்லும் பகுதியில் நடந்தான் வல்லாளதேவன்.

அறக்கோட்டத்து வாசலை அவன் நெருங்கியபோது அங்கே அண்டராதித்த வைணவனும், அவன் மனைவி கோதையும் நின்று கொண்டு யாரோ ஒரு குதிரை வீரனை வழியனுப்பிக் கொண்டிருந்தனர். குதிரையின்மேல் வீற்றிருந்தவன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாராயிருந்தான்.

திடீரென்று தளபதி வல்லாளதேவன் கால்நடையாக அங்கு வந்து சேர்ந்தது அவர்களுக்கு வியப்பை அளித்தது. குதிரையின்மேல் இருந்தவன் பரபரப்படைந்து உடனே கீழே குதித்துத் தளபதியை வணங்கினான். அண்டராதித்தனும் கோதையும் கூட வணங்கினர்.

“கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச் சாத்தனிடமி ருந்து வருகிறேன். அவசர ஓலை ஒன்றுடன் அரண்மனைக்குத் தூதனுப்பப் பட்டிருக்கிறேன்" என்று தளபதி வல்லாளதேவனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் புதியவன்.