பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“இந்தக் குழந்தைகளுக்கு நிறையக் குங்குமமும் சந்தனமும் கொடுங்கள். இவர்கள்தான் பூவும் குங்குமமுமாகச் சந்தனமும் மஞ்சளும் பூசிப் பெருவாழ்வு வாழ வேண்டியவர்கள். எங்களையெல்லாம்விடக் கன்னியாகுமரியம்மன் மேல் இவர்களுக்குத்தான் உரிமை அதிகம். அவளைப் போலவே இவர்களும் கன்னிகைகள். ஆனால் என்றைக்குமே அப்படி இருந்து விடமாட்டார்கள்!” என்று மகாராணி சிரித்துக் கொண்டே கூறியபோது எல்லோரும் சிரித்தார்கள். தாழ்வான குறுகிய அந்த முன் மண்டபத்தில் ஏககாலத்தில் அத்தனை சிரிப்பொலிகளும் எதிரொலித்தன. கேலிக்கு ஆளான பகவதியும் விலாசினியும் கன்னஞ் சிவக்க முறுவலித்தவாறு தலை குனிந்தார்கள். குனிந்த தலை நிமிராமலே குங்குமமும், சந்தனமும் எடுத்துக் கொண்டார்கள்.

“குழந்தைகளே! வாருங்கள். கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியிருக்கும் இந்தப் பிரகாரத்தை வலம் வரலாம்” என்று அவர்கள் இருவரையும் இரண்டு கைகளிலும் பற்றிக் கொண்டு பிரகாரத்துக்குள் நுழைந்தார் மகாராணி.

இருண்டு குறுகலாயிருந்த அந்தச் சிறிய பிரகாரத்தில் ஒளி மங்கிய அகல் விளக்குள் எரிந்து கொண்டிருந்தன. மகாராணியாரும் பெண்கள் இருவரும் தவிர மற்றவர்கள் எல்லோரும் மண்டபத்திலே நின்று விட்டார்கள். குறுகலான வழியில் எல்லோரும் ஒரே சமயத்தில் நுழைந்தால் இடையூறாக இருக்குமென்று எண்ணி அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் முதலியவர்கள் கூட வெளியே நின்று கொண்டனர்.

விலாசினியிடமும், பகவதியிடமும் ஏதேதோ சிரித்துப் பேசிக்கொண்டே பிரகாரத்தில் நடந்தார் மகாராணி. பிரகாரத்தின் மேற்புறச் சுவரில் மூன்று பாகத்துக்கு ஒரு துவாரமாக வட்டத் துவாரங்கள் இருந்தன.

அந்த வட்ட இடைவெளிகளின் மூலம் நீலவானத்தின் சின்னஞ்சிறு நட்சத்திரப் பூக்கள் பெளர்ணமி நிலா.ஒளியில் அழகாகத் தோன்றின.